சல்மான் கானுக்கு விடுதலை பெற்றுத் தந்த வக்கீல், ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்காக ஆஜர்.. காரசார வாதம்
மும்பை: போதைப்பொருள் பார்ட்டி வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், மீண்டும் ஜாமீன் பெற முடியவில்லை. ஜாமீன் மனு மீதான விசாரணையை அக்டோபர் 20க்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
அதேநேரம் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்பதற்காக மகாத்மா காந்தியை மேற்கோள் காட்டி வாதிட்டார், போதை மருந்து தடுப்பு பிரிவு வழக்கறிஞர்.
மும்பை அருகே கப்பலில் வைத்து நடந்த பார்ட்டியில் போதை மருந்து பயன்படுத்தியதாக ஆர்யன் கான் உள்ளிட்ட சிலரை போதை மருந்து தடுப்பு பிரிவு கைது செய்துள்ளது.

வீடியோ காலில் பேச அனுமதி
நேற்று வழக்கு மும்பை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பிலும் காரசார வாதங்கள் முன் வைக்கப்பட்டன. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பிறகு, சிறப்பு நீதிபதி வி.வி.பாட்டீல் வழக்கை அக்டோபர் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். ஜாமீன் வழங்கப்படும் வரை ஆர்யன் கான் சிறையில் இருக்க வேண்டும். ஆர்யன் ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கேண்டீனில் அவருக்கு விருப்பமான பொருட்களை ஆர்டர் செய்து சாப்பிட அனுமதிக்கப்பட்டுள்ளது. வீடியோ கால் மூலம் தனது பெற்றோருடன் வாரம் ஒருமுறை, பேசவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி இன்று ஆர்யன் கான் தனது தந்தை ஷாருக் கான் மற்றும் தாய் கவுரி கானிடம் பேசியுள்ளார்.

மகாத்மா காந்தி
முன்னதாக நேற்று நடைபெற்ற வாதத்தின்போது, போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் அனில் சிங் தனது வாதத்தில் மகாத்மா காந்தி மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களை குறிப்பிட்டார். சுதந்திர போராட்ட வீரர் மகாத்மா காந்தி சுதந்திரத்திற்காக போராடிய நாட்டில் போதைப்பொருள் போன்ற போதைப்பொருட்களை இளைஞர்கள் பயன்படுத்துவதை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும் என்று அவர் கூறினார். ஆர்யன் கான் கைது செய்யப்பட்டது அக்டோபர் 2ம் தேதியான காந்தி ஜெயந்தி தினத்தில் என்பது இதற்கு முக்கிய காரணமாகும்.

குழந்தையை சிறையில் வைக்காதீர்கள்
இந்த வாதத்திற்கு பதிலளிக்கும் விதமாக, ஆர்யன் கான் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அமித் தேசாய், சுதந்திரம் அனைவருக்கும் அடிப்படை உரிமை. ஆர்யன் கான் போதை பொருளை நுகர்ந்ததாகத்தான் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். இதற்காக ஒரு சிறு குழந்தையை சிறையில் வைத்திருக்க முடியாது. ஆர்யனிடமிருந்து போதை மருந்து மீட்கப்படவில்லை. பணத்தை மீட்கவில்லை. ஆர்யனை விருந்துக்கு அழைத்தவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. எனவே ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.

ஜாமீன் வழங்க எதிர்ப்பு
ஆனால், அனில் சிங் இதை எதிர்த்தார். ஜாமீன் வழங்குவதற்கான நிபந்தனைகளில் குழந்தை என்பதை கருத்தில் எடுக்க கூடாது. போதைப்பொருள் இளைஞர்களையும், கல்லூரி மாணவர்களையும் பாதிக்கிறது. நமது எதிர்கால தலைமுறையின் நலன் சார்ந்தது. இவ்வாறு அவர் வாதிட்டார்.
விசாரணை நடைபெற்றபோது நீதிமன்றத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது குறிப்பிடத்தக்கது.

சல்மான் கானுக்காக ஆஜரானவர்
ஆர்யன் கான் சார்பில் முதலில் வழக்கறிஞர் சதீஷ் மன்ஷிண்டே ஆஜராகினார். ஆனால் அவர் ஆர்யன் கானுக்கு ஜாமீன் பெற்றுத் தர தவறிவிட்டார். அதன் பிறகு ஷாருக் கான் தனது மகனின் வழக்கறிஞரை மாற்றினார். இப்போது மூத்த வழக்கறிஞர் அமித் தேசாய் ஆஜராகிறார். சல்மான் கான் சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது காரை ஏற்றி கொன்றதாக நடைபெற்ற வழக்கில் சல்மான் கானுக்கு ஆஜராக விடுதலை பெற்றுத் தந்தவர் அமித் தேசாய் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த அமித் தேசாய்
இந்த வழக்கில் முதலில் சல்மான் கானுக்கு ஐந்து வருட சிறைத்தண்டனை விதித்தது நீதிமன்றம். 2015ம் ஆண்டு மே மாதம் முதல் அமித் தேசாய் சல்மான் கானுக்காக ஆஜரானார். இதன்பிறகுதான் சல்மான் கான் விடுதலை செய்யப்பட்டார். மும்பை உயர் நீதிமன்ற குற்றவியல் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார் அமித் தேசாய் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications