அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பைடனுக்கும் மும்பைக்கும் என்ன தொடர்பு... வருத்தப்பட்ட ஜோ!!
மும்பை: அமெரிக்காவின் இளம் வயது செனட்டர்களில் ஒருவர் ஜோ பைடன். 1972 ஆம் ஆண்டில் இவர் செனட்டராக தேர்வு செய்யப்பட்டபோது, மும்பையில் இருந்து இவருக்கு ஒருவர் கடிதம் அனுப்பி இருந்தார். அவரது இறுதிப் பெயரும் பைடன் என்று முடிந்து இருந்தது. செனட்டராக தேர்வான ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவித்து மும்பை பைடன் கடிதம் எழுதியுள்ளார்.
Recommended Video
ஆனால், தற்போது ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஜோ பைடனுக்கும், இவருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால், இருக்கிறது என்று ஜோ பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். மும்பை பைடனுடன் சேர்த்து பைடன் என்ற பெயரைக் கொண்ட ஐந்து பேர் மும்பையில் இருந்துள்ளனர்.

மும்பையில் உள்ள பைடனிடம் இருந்து ஜோ பைடனுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அப்போது 29 வயதான ஜோ பைடன் மும்பை பைடனுடன் தொடர்பில் இருக்க விரும்பியுள்ளார். ஆனால், முடியவில்லை. இதற்குக் காரணம் தொடர்ந்து அமெரிக்க அரசியலில் பிசியானதுதான்.
இதற்குப் பின்னரும் இந்திய அமெரிக்கர்களை, இந்திய தலைவர்களை சந்திக்கும் போதெல்லாம் மும்பை பைடனை குறிப்பிட்டு பேசுவதற்கு ஜோ பைடன் தவறுவதில்லை. 2013, ஜூலை 24ஆம் தேதி மும்பை பங்குச் சந்தைக்கு அமெரிக்க துணை அதிபராக வந்திருந்த ஜோ பைடன், மும்பை பைடனை மறக்கவில்லை.
அவர் பேசும்போது, ''நான் 1972ல் எனது 29 வயதில் அமெரிக்க செனட் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு இருந்தேன். அப்போது எனக்கு முதல் கடிதமாக மும்பை பைடனிடம் இருந்து வந்தது. என்னை வாழ்த்தி இருந்தார். அவரை தற்போது என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை. தற்போது இருப்பவர்களால் அவரை கண்டுபிடிக்க முடியும். மும்பையில் இருக்கும் பைடனுக்கும் எனக்கும் தொடர்பு இருக்கிறது என்று நினைக்கிறேன். 1700ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனிகளில் பணியாற்றுவதற்கு எனது முன்னோர் இங்கு வந்துள்ளனர். அதனால் இந்த தொடர்பு இருக்கலாம் என்று நம்புகிறேன்'' என்றார்.
இதேபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாஷிங்டனில் பேசி இருந்த ஜோ பைடன், எனது முன்னோர் கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றி இருந்தனர். இந்தக் கம்பெனியில் பணிபுரிந்த எனது முன்னோர் ஒருவர் இந்தியப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மும்பை பைடனுக்கும் எங்களது முன்னோருக்கும் தொடர்பு இருந்து இருக்கலாம். இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் நானும் இந்திய தேர்தலில் போட்டியிட தகுதியானவன். ஆனால், மும்பை இந்தியரை நான் தொடரவில்லை. இனி அவர் எங்கு இருக்கிறார் என்பதை குறித்து ஆராய இருக்கிறேன். நாங்கள் இருவரும் உறவினர்தானா என்பது குறித்தும் அறிய இருக்கிறேன்'' என்று தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து இவர் மும்பையில் இருக்கும்போது, ஒரு பத்திரிக்கையாளர் இவரிடம் பைடன் பெயரில் ஐந்து பேரின் பெயர் பட்டியலை கொடுத்துள்ளார். அடுத்த நாள் நடந்த பத்திரிக்கையாளர் கூட்டத்தில் இவர் பேசிக் கொண்டு இருக்கும்போதுதான் அவர்களது பெயர் பைடனிடம் கொடுக்கப்பட்டது இதை நான் நிரூபித்து விட்டேன் என்று அப்போது பைடன் கூறியுள்ளார்.
இதன் பின்னர் வாஷிங்டன் டிசி மக்களிடம் பேசுகையில், '' உங்களுக்கு தெரியுமா எனக்கு உறவினர்கள் இருக்கிறார்கள் என்று. மும்பையில் என்னுடைய உறவினர்கள் இருக்கிறார்கள். அவர்களை நான் சங்கடப்படுத்தி விட்டேன். அவர்களை நான் பின் தொடரவில்லை. எவ்வளவு சிறிய உலகம், எவ்வாறு இந்த உலகப் பொருளாதாரம் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளுக்குள் ஒத்துப் போயுள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
மும்பைக்கும் ஜோ பைடனுக்கும் இதுதான் தொடர்பு என்றால், துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸூக்கு இந்தியாவுடன் நேரடி தொடர்பு இருக்கிறது. அவரது தாய் தமிழகத்தைச் சேர்ந்தவர். இதைப் பார்க்கும்போது, யார் எந்த நாட்டில் இருந்தாலும், எதாவது ஒரு வகையில் மற்ற நாட்டினருடன் உறவு முறை இருக்க வாய்ப்பிருக்கிறது என்பது மட்டும் புரிகிறது. உலகம் சிறியது என்பதும் இதுதான்.












Click it and Unblock the Notifications