மகா.வில் மீண்டும் பரபரப்பு - சரத்பவாரை திடீரென சந்தித்த பாஜக எம்பி சஞ்சய் காகடே
மும்பை: மகாராஷ்டிரா அரசியலில் மேலும் ஒரு புதிய திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) தலைவர் சரத்பவாரை பாஜக எம்பி சஞ்சய் காகடே இன்று சந்தித்து பேசினார். ஆனால் இது தனிப்பட்ட சந்திப்பு என சஞ்சய் காகடே கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா அரசியலில் அனைத்தும் மர்மங்களாகவே நடைபெற்று வருகின்றன. யார் ஆட்சி அமைப்பது என்கிற சிக்கல் வந்த போது ஆளுநர்களை கட்சித் தலைவர்கள் அடுத்தடுத்து சந்தித்தனர்.
அப்போது, விவசாயிகள் பிரச்சனை குறித்து ஆளுநரிடம் விவாதித்ததாக அந்த தலைவர்கள் கூறினர். காங்கிரஸ்-சிவசேனா- என்சிபி இணைந்து ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருந்தது.
அப்போது டெல்லி சென்ற என்சிபி தலைவர் சரத்பவார் திடீரென பிரதமர் மோடியுடன் 50 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதும் விவசாயிகள் பிரச்சனை குறித்து மனுகொடுத்ததாக கூறினார் சரத்பவார்.
தற்போது மகாராஷ்டிராவில் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென பாஜகவின் பட்னாவிஸ் முதல்வராக்கப்பட்டுள்ளார். சிவசேனா அரசு அமைக்க என்சிபி எம்.எல்.ஏக்கள் கையெழுத்திட்ட கடிதங்களை அஜித் பவார் ஆளுநரிடம் கொடுத்து அது பாஜக ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு கடிதம் என்றார்.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இன்று விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணைக்கு வரும் முன்பாக இன்று காலை திடீரென பாஜக எம்பி சஞ்சய் காகடே, என்சிபி தலைவர் சரத்பவாரை சந்தித்து பேசினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் காகடே, சரத் பவாரை தனிப்பட்ட முறையில் தாம் சந்தித்ததாக கூறினார்.