உயிருக்கு பயந்து நாடு திரும்பும் மக்கள்..கொரோனா டெஸ்ட் எடுக்கனுமாம்.. அதிகாரிகள் அறிவிப்பால் “ஷாக்”
மும்பை : உக்ரைனில் இருந்து நாடு திரும்புவோர் கொரோனாவுக்கு தடுப்பூசி போட்டிருக்காவிட்டால், மும்பை விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் சோதனை நடத்தப்படும் எனவும், கொரோனா இல்லையென்றால் மட்டும் வீடு செல்ல அனுமதிக்கப்படுவர் என மும்பை விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
போர் தீவிரமடைந்துள்ள நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்னமும் உக்ரைன் தலைநகர் கீவில் தான் உள்ளார் எனவும், அவர் தலைநகரை பாதுகாப்பதற்கான ராணுவ நடவடிக்கைகளை நேரடியாக ஒருங்கிணைத்து வருகிறார் என உக்ரைன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தனது உயிருக்கு குறி வைக்கப்பட்டு உள்ளது என சில தினங்களுக்கு முன்பே ஜெலன்ஸ்கி கூறியிருந்த நிலையில் , அவர் நாட்டை விட்டு வெளியேறாமல் போரை ஒருங்கிணைத்து வருகிறார்.
அரசுகள் திட்டம்
இந்நிலையில் போர் காரணமாக ஏராளமானோர் உக்ரனை விட்டு வெளியேறுகின்றனர். குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்த ஏராளமானோர் உக்ரைனில் கல்வி மற்றும் வேலைக்காக தங்கியிருந்த நிலையில், போரால் நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பிரிவாக மக்களை அழைத்து வர மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டு வருகின்றனர்.
விமானம் புறப்பட்டது
ரூமானியாவின் புக்காரெஸ்ட்டில் இருந்து இந்தியர்களுடன் முதல் மீட்பு விமானம் இந்தியா புறப்பாட்டுள்ள நிலையில், 5 தமிழர்கள் உள்பட 219 இந்தியர்களுடன் மும்பை புறப்பட்டுள்ள மீட்பு விமானம் இன்று மாலை மும்பை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 470 இந்தியர்களை மீட்டு கொண்டு இன்று சுமார் 4 மணி அளவில் முதல் விமானம் மும்பைக்கு வர உள்ள நிலையில் 2வது விமானம் டெல்லிக்கு வருகிறது
தடுப்பூசி கட்டாயம்
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் முரளிதரன் ஆகியோர் டெல்லி விமான நிலையத்திற்கு நேரில் சென்று மாணவர்களையும் இந்தியர்களையும் வரவேற்கின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உக்ரைனில் இருந்து நாடு திரும்புவோர் கொரோனாவுக்கு தடுப்பூசி போட்டிருக்காவிட்டால், மும்பை விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் சோதனை நடத்தப்படும் எனவும், கொரோனா இல்லையென்றால் மட்டும் வீடு செல்ல அனுமதிக்கப்படுவர் என மும்பை விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கொரோனா பரிசோதனை
அந்த அறிவிப்பில், உக்ரைனில் இருந்து நாடு திரும்புவோர் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டுமெனவும், சான்றிதழ் இல்லாவிட்டால் நாடு திரும்புவோருக்கு ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்படும் எனவும், அதற்கான கட்டணத்தை விமான நிலையமே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா இல்லை என முடிவு வந்த பிறகே இந்தியர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. உயிருக்கு பயந்து நாடு திரும்பி வரும் நிலையில் விமான நிலைய அதிகாரிகளின் இந்த திடீர் அறிவிப்பால் குழப்பம் உருவாகி உள்ளது.