சூப்பர்.. "கோவிஷீல்டு" தடுப்பூசி செலுத்தப்பட்ட 2 பேருமே நல்லா இருக்காங்களாம்.. புனே ஆஸ்பத்திரி தகவல்
புனே மருத்துவமனையில் 2 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது
மும்பை: கொரோனா வைரஸுக்கு எதிராக நம்பிக்கையூட்டும் தடுப்பூசிகளில் ஒன்றான ஆக்ஸ்போர்டு வாக்சின் புனேயில் 2-ம் கட்ட மனிதர்களுக்கான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது.. அதன்படி 2 தன்னார்வலர்களுக்கு இந்த தடுப்பூசி உடலில் செலுத்தப்பட்டது.. அவர்களுக்கு உடல்ரீதியாக எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என்று டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Recommended Video
ஆக்ஸ்போர்டு பல்கலை. ஒரு கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது.. அதற்கு"கோவிஷீல்டு" என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த கோவிஷீல்டு எனப்படும் தடுப்பூசி பல்வேறு நாடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நமக்கும் இப்படி ஒரு சோதனை நடத்த முதல்வர் எடப்பாடியார் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.

தடுப்பூசி
இந்த ஆய்வினை பொறுத்தவரை 18 வயதிற்கு மேற்பட்ட ஆரோக்கியமான நபர்களிடம்தான் மேற்கொள்ளப்படும்... இந்த தடுப்பூசி டி செல்கள் என்று அழைக்கப்படும் வெள்ளை அணுக்களை 14 நாட்களில் மனித உடலில் உருவாக்கும்... இந்த வெள்ளை அணுக்கள் மனிதர்களின் உடலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட செல்கள் மீது தாக்குதல் தொடுத்து உடனடியாக அதனை அழித்துவிடும். மேலும் 28 நாட்களுக்குள் நோய் எதிர்ப்பு சக்தியையும் உடலில் உருவாக்கி விடும். இதுதான் அந்த ஊசியின் ஸ்பெஷாலிட்டி!

பீதி ஒழியும்
எனவே, இப்போதைக்கு இந்த தடுப்பு மருந்து தான் நமக்கு உயிர்காக்கும் மருந்து போல உள்ளது.. இதை பயன்பாட்டிற்கு வந்துவிட்டால், இந்தியாவுக்கு இருக்கும் பெரிய பிரச்சனையும், பீதியும் ஒழியும் என்று நம்பப்படுகிறது!

கிளினிகல் சோதனை
இந்நிலையில், புனே பாரதி வித்யாபீட மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில், இந்த தடுப்பூசியின் 2ம்கட்ட கிளினிகல் சோதனை நடந்துள்ளது.. அதன்படி 2 பேருக்கு இந்த தடுப்பூசியை போட்டுள்ளனர். அதன்படி, இந்த வாக்சினை முதலில் 32 வயது நபருக்கு செலுத்தினர். அதாவது இவருக்கு ஏற்கனவே டெஸ்ட் செய்து, ரிசல்ட்டில் நெகட்டிவ் என்று வந்ததால், இந்த இவருக்கு செலுத்தப்பட்டு சோதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல மற்றொரு தன்னார்வலருக்கும் கோவிஷீல்ட் வாக்சின் செலுத்தப்பட்டுள்ளது.. அவருக்கு வயது 48!

ரத்த அழுத்தம்
இந்த வாக்சின் செலுத்தப்படுவதற்கு முன்பாக டாக்டர்கள் 2 பேருக்கும் உடல் வெப்ப நிலை, ரத்த அழுத்தம், இருதயத் துடிப்பு ஆகியவற்றை சரிபார்த்தனர்... தடுப்பூசி போடப்பட்டு 24 மணி நேரம் ஆன நிலையில், அவர்களுக்கு எந்த உடல் ரீதியான பிரச்சனையும் ஏற்படவில்லையாம்.. இதை மருத்துவமனை நிர்வாகமே உறுதிபடுத்தி உள்ளது.

பாசிட்டிவ்
அதனால், இன்று மேலும் 3 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.. இந்த 5 பேருமே தன்னார்வலர்கள் ஆவார்கள்.. ஆனால், இதில் 3 பேரின் சோதனையில் பாசிட்டிவ் என்று வந்தது. எனவே அவர்களுக்கு இந்தச் சோதனைக்கு தகுதி பெறவில்லை டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர்.

நம்பிக்கை
தற்போது 2 பேருக்கு மட்டுமே வாக்சின் செலுத்தப்பட்டு இருவரும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஒரு மாசம் கழித்து தடுப்பூசியின் 2-ம் டோஸ் போடப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதைதவிர, அடுத்த 7 நாட்களுக்கு 25 பேருக்கு வாக்சின் செலுத்தப்படவுள்ளதாக டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கொரோனா இல்லாத ஒரு நாட்டை நம்மால் நிச்சயம் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையும் சேர்ந்தே பிறந்துள்ளது!












Click it and Unblock the Notifications