வேலையில்லா திண்டாட்ட கொடுமை.. 55 வயதில் தற்கொலை செய்த நபர்.. மகாராஷ்டிராவில் ஷாக்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வேலையில்லா திண்டாட்டத்தால் 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்றுக்கு பின்னர் இந்தியா மெல்ல இழப்பிலிருந்து மீண்டு வருகிறது. கடந்த மாதம் இருந்ததை விட ஜூலை மாதம் வேலையின்மை விகிதம் குறைந்துள்ளதாக சமீபத்தில் மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் இந்த தற்கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் மட்டுமல்லாது நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவில் வேலையின்மை விகிதம் 7.8 சதவிகிதமாக அதிகரித்திருந்தது. இதனால் சுமார் 1.30 கோடிக்கும் அதிகமானோர் தங்கள் வேலையை இழந்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்திருந்தது. இதில் பெரும்பாலானோர் வேளாண் தொழில் சார்ந்து இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலையின்மை
கடந்த 2019ம் ஆண்டு தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் அனைத்தையும் முடக்கியது. குறிப்பாக வேலையின்மை இந்த தொற்றால் விகிதம் முன்னெப்போதும் இல்லாததைவிடவும் அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில் தொற்று பாதிப்புக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் உலகம் இயல்பு நிலைக்கு திரும்பியது. இதனையடுத்து பொருளாதாரமும் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நிலைமை சீரடையவில்லை. வல்லரசு நாடுகளாக அறியப்பட்ட அமெரிக்க உள்ளிட்ட நாடுகளிலும் இந்த பிரச்னை எதிரொலிக்கத் தொடங்கியது.

தற்கொலை
இந்த சூழலில் மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூரை சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வேலையின்மை காரணமாக தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளார். தனது தாயுடன் வசித்து வந்த இவர், ஜூஸ் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். ஆனால் தொடர்ந்து ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடையை விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆனாலும் பணப்பிரச்னை தீர்ந்தபாடில்லை. எனவே வேலையைத் தேடி அலைந்துள்ளார். ஆனால் போதுமான வருமான வரும் அளவிற்கான வேலை அவருக்கு கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனையடுத்து மன உளைச்சலில் இருந்த அவர் கோலிபுரா நகரில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்.

தரவுகள்
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்தியாவில் வேலையின்மை தரவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதன்படி, கொரோனாவிற்கு முன்பு 2019ல் பட்டதாரிகளின் வேலையின்மை விகிதம் 14.9% ஆக இருந்தது. அதன் பின்னர், 2020-ல் 15.1% ஆக அதிகரித்து, 2021-ல் 19.3% ஆக உச்சமடைந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாத கணக்கெடுப்பின்படி இந்தியாவில் வேலையின்மை விகிதம் 17.8% ஆக குறைந்திருந்தது. பட்டதாரிகள் வேலையின்மை விகிதம், கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகபட்சமாக 54.2% ஆகவும், பீகாரில் 34.2% ஆகவும், ஆந்திர பிரதேசத்தில் 33.6% ஆகவும், அரியானாவில் 32.4% ஆகவும், கேரளாவில் 23.8% ஆகவும் உள்ளது.

தேசிய நிலைமை
அதே சமயம் பட்டதாரிகள் வேலையின்மை விகிதம் மிக குறைந்த அளவில் குஜராத்தில் 4.8% ஆக உள்ளது. அதை தொடர்ந்து கர்நாடகாவில் 6.1% ஆகவும், ஒடிசாவில் 8.9% ஆகவும், மத்திய பிரதேசத்தில் 9.1% ஆகவும், மராட்டிய மாநிலத்தில் 9.4% ஆகவும் உள்ளது. ஜூன் மாத நிலவரத்தின்படி, அனைத்து பிரிவினருக்குமான வேலையின்மை விகிதம் அதிகபட்சமாக அரியானாவில் 30.6% ஆகவும், ராஜஸ்தானில் 29.8% ஆகவும், அசாமில் மற்றும் ஜம்மு காஷ்மீரில் 17.2% ஆகவும், பீகாரில் 14% ஆகவும், சிக்கிமில் 12.7% ஆகவும், ஜார்கண்டில் 12.2% ஆகவும், தமிழகத்தில் 2.1% ஆகவும், மத்திய பிரதேசத்தில் 0.5% ஆகவும், புதுச்சேரியில் 0.8% ஆகவும் உள்ளதாக சமீபத்தில் இந்திய பொருளாதார ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications