தங்கை மீது மட்டும் அதிக பாசம்.. வீட்டை விட்டு ஓடிப்போன அக்காள் சொன்ன பாடம்
மும்பை: பெற்றோர்கள் தங்களுக்கு எத்தனை குழந்தை இருந்தாலும், அத்தனை குழந்தைகள் மீது பாசம் வைத்திருப்பார்கள். ஆனால் பாசத்தை வெளிப்படுத்துவது என்பது, அக்கறையை அதிகம்காட்டுவது என்பது கடைக்குட்டி மீது தான் இருக்கும். இது எல்லா வீடுகளிலும் உள்ளது தான் என்றாலும், சில நேரங்களில் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. அப்படித்தான் தங்கை மீது தாய் அதிக பாசம் வைத்திருப்பதாக நினைத்து கவலை அடைந்து வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த 13 வயது சிறுமியை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
இரு குழந்தை அல்லது மூன்று குழந்தை வைத்துள்ள பெற்றோர் தங்களது கடைசி பிள்ளையிடம் அதிக பாசத்தை வெளிப்படுத்துவார்கள். அந்த பாசம் முதல் குழந்தைக்கும் கண்டிப்பாக கிடைக்க வேண்டும். முதல் குழந்தை வளர்ந்தாலும் அவரும் குழந்தை என்பது மறக்கக்கூடாது. முதல் குழந்தையிடம் காட்டும் பாசத்தை இரண்டாவது குழந்தையிடமும் காட்ட வேண்டும். ஆனால் பலரும் தங்களது இரண்டாவது குழந்தையை தாங்கும் அளவிற்கு முதல் குழந்தையை தாங்குவது இல்லை..

தங்களுக்கு இதற்கு மேல் குழந்தை என்பதை உணரும் அவர்கள், முடிந்த வரை இரண்டாம் குழந்தைக்கு பாசத்தை கொட்டுகிறார்கள். முதல் குழந்தையை பொறுத்தவரை, இரண்டாம் குழந்தை பிறக்கும் வரை கிடைத்த பாசம், தங்கை அல்லது தம்பி பிறந்த பிறகு கிடைக்காமல் தவிக்கிறார்கள். இந்த முரண்பாடு அவர்களை மனதளவில் பாதிக்கிறது. அப்படித்தான் ஒரு சிறுமி மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் வீட்டை விட்டு ஓடிபோய்விட்டார். அவரை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் ஹுஞ்சரோலி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் திடீரென சிறுமி மாயமானார். முதலில் சிறுமி அருகில் எங்காவது விளையாட சென்று இருப்பார் என பெற்றோர் நினைத்தார்கள். எனினும் வெகுநேரமாக அவர் திரும்பி வராததால் பெற்றோர் அவரை தேடத்தொடங்கினர். பெற்றோர் ஊர் முழுவதும் தேடியும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் சம்பவம் குறித்து சபாலே போலீசில் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து போலீசார், கிராம மக்கள் உதவியுடன் சிறுமியை ஊரைச் சுற்றி உள்ள பகுதிகளில் தீவிரமாக தேடினார்கள். அப்போது அவர் ஊர் அருகில் உள்ள தரஞ்சரோலி அணை பகுதியில் பத்திரமாக மீட்கப்பட்டார்.
விசாரணையில், தாய் தன்னை விட தங்கை மீது அதிக பாசம் வைத்திருப்பதாக நினைத்து சிறுமி மனவேதனை அடைந்துள்ளார். இதனால் அவர் வீட்டைவிட்டு வெளியே சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிறுமியை கவுன்சிலிங்கிற்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பின்னர் அவர் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
சிறுமி மீட்கப்பட்டது குறித்து மாவட்ட எஸ்பி யதிஷ் தேஷ்முக் கூறுகையில், "தாய் மீதான கோபம் காரணமாக சிறுமி மிகுந்த மன உளைச்சலுடன் இருந்தார். அவர் தன்னையே காயப்படுத்திக் கொள்ளும் அபாயமும் இருந்தது. எனவே சிறுமியின் பாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கியமாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றி மீட்கப்பட்டார். எனவே அவரை கவுன்சிலிங்கிற்கு அனுப்பி, அதன்பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தோம்" என்றார். தன்னை விட தங்கை மீது தாய் அதிக பாசம் வைத்திருப்பதாக நினைத்து சிறுமி வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த சம்பவம் பால்கரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உங்களுக்கு எத்தனை குழந்தை.. உங்கள் குழந்தைகளில் எந்த குழந்தையிடம் பாசத்தை கொட்டுவீர்கள்.. உங்களுக்கு தெரிந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருந்தால் கமெண்டில் கூறுங்கள்.












Click it and Unblock the Notifications