தலைக்கேறிய போதை.. மனைவியை கொடூரமாக தாக்கிய மாஜி கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி.. பாய்ந்த வழக்கு
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான வினோத் காம்ப்ளி மதுபானம் குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்நிலையில் இரவில் மதுபோதையில் அவர் தனது மனைவியை கொடூரமாக பான் சமையல் பாத்திரம் மற்றும் பேட்டால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் நண்பராக அறியப்படுபவர் வினோத் காம்ப்ளி. பள்ளி பருவத்தில் இருவரும் இணைந்து பல சாதனைகளை படைத்துள்ளனர். அதன்பிறகு இருவரும் இந்திய கிரிக்கெட் அணிக்காக தேர்வாகினர்.
இதில் சச்சின் தெண்டுல்கர் போட்டிக்கு போட்டி ஜொலித்த பல உலக சாதனைகளை படைத்தார். ஆனால் வினோத் காம்ப்ளிக்கு சர்வதேச கிரிக்கெட் அவ்வளவு சரியானதாக அமையவில்லை. வினோத் காம்ப்ளி இந்தியாவுக்காக 17 டெஸ்ட் போட்டிகளில் 1087 ரன், 104 ஒருநாள் போட்டியில் 2477 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார்.
பொய்செய்தி.. ரொம்ப பயமாக இருக்கு..ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பற்றி சச்சின் பைலட் பரபர பதிவு
குடிபோதையில் காம்ப்ளி
தற்போது 51 வயது நிரம்பிய வினோத் காம்ப்ளி மகாராஷ்டிரா மாநிலம் மும்பை புறநகர் பகுதியில் வசித்து வருகிறார். மேற்கு பாந்த்ரா எனும் இடத்தில் வினோத் காம்ப்ளி தனது மனைவி ஆண்ட்ரியா மற்றும் 12 வயது மகன் உள்பட 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். வினோத் காம்ப்ளிக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வினோத் காம்ப்ளி மதுபோதையில் இருந்துள்ளார்.
மனைவி மீது தாக்குதல்
இந்த வேளையில் வீட்டில் திடீரென்று பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனது மனைவியை ஆபாசமான வார்த்தைகளை சொல்லி திட்டியுள்ளார். மேலும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பான் பாத்திரத்தை எடுத்து அவர் தனது மனைவியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதையடுத்து அவரது மனைவி வீட்டை விட்டு வெளியேற சென்ற நிலையில் கிரிக்கெட் பேட்டை எடுத்து மீண்டும் தாக்கி உள்ளார். இதை பார்த்த 12 வயது மகன் வினோத் காம்ப்ளியை தடுக்க முயன்றார். இருப்பினும் அவர் எதையும் கேட்காமல் தொடர்ந்து மனைவியை ஆபாசமாக திட்டியுள்ளார்.
2 பிரிவுகளில் வழக்குப்பதிவு
இதில் காயமடைந்த அவரது மனைவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி வினோத் காம்ப்ளியின் மனைவி ஆண்ட்ரியா போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வினோத் காம்ப்ளி மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம் 324 (ஆபத்தை விளைவிக்கும் ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல்), 504 (அவமதிப்பு செய்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் முறையல்ல..
வினோத் காம்ப்ளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் குடிபோதையில் வாகனம் ஓட்டி போலீசாரிடம் சிக்கியது உள்பட அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வந்தார். சமீபத்தில் கூட வீட்டு காவலாளிகளிடம் தகராறில் ஈடுபட்டது வினோத் காம்ப்ளிக்கு பிரச்சனையாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.