Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காங்கிரஸ் மூத்த தலைவர்.. முன்னாள் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவை சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான சிவராஜ் பாட்டீல் (வயது 90), இன்று காலை காலமானார். நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் சிவராஜ் பாதிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 6.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

50 ஆண்டுகளுக்கும் மேல் அவர் தீவிர அரசியலில் பங்கேற்றிருக்கிறார். மத்திய அரசில் பல முக்கியப் பதவிகளை வகித்துள்ளார். மக்களவை சபாநாயகர், மத்திய அமைச்சர் எனப் பல்வேறு பொறுப்புகளில் திறம்படச் செயல்பட்டுள்ளார். இவர் லாத்தூரின் சக்கூர் பகுதியில் 1935 அக்டோபர் 12 அன்று பிறந்தார்.

Congress Delhi

அணுசக்தி விவகாரங்கள்

1991 முதல் 1996 வரை 10வது மக்களவை சபாநாயகராகப் பதவி வகித்த காலத்தில், தகவல்கள் பரவுதல் மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஒளிபரப்புவதில் தொழில்நுட்பத்தை கொண்டு வந்ததற்காக பெரிதும் அறியப்பட்டார். மேலும், நாடாளுமன்ற நூலகக் கட்டிடம் கட்டுவதிலும் முக்கியப் பங்காற்றினார்.

அவர் 1980-82-ல் பாதுகாப்புத் துறை இணையமைச்சராகவும், 1982-83-ல் வர்த்தக அமைச்சராகவும் பணியாற்றினார். ராஜீவ் காந்தி அமைச்சரவையில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்ற காலத்தில், பணியாளர், பாதுகாப்பு உற்பத்தி, சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலா அமைச்சகங்களையும் வழிநடத்தினார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சராக, 1983 அக்டோபர் 3 அன்று புது டெல்லியில் கியூபாவின் அணுசக்தி விவகாரங்களுக்கான நிர்வாகச் செயலாளர் டாக்டர் சிடெல் காஸ்ட்ரோ தியாஸ்-பலாரட்டுடன் சந்திப்பு நடத்தினார். அதேபோல், இத்தாலிய மற்றும் பிரெஞ்சு பிரதிநிதிகளுடனும் சந்திப்புகள் மேற்கொண்டார்.

அரசியல் பயணம்

2010 முதல் 2015 வரை பஞ்சாப் ஆளுநராகவும், சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாகவும் பாட்டீல் பணியாற்றினார். அவரது அரசியல் பயணம் 1967 இல் லாத்தூர் நகராட்சி மன்றத் தலைவராகத் தொடங்கியது. 1970-களின் முற்பகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1972 இல் முதல் முறையாக எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1978 இல் இரண்டாவது முறையாகவும் பணியாற்றினார்.

லாத்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து 1980, 1984, 1989, 1991, 1996, 1998 மற்றும் 1999 என ஏழு முறை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் ரூபாதாய் பாட்டீல் நிலங்கேக்கரிடம் தோல்வியுற்றார்.

ராஜினாமா

2004 ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். ஆனால், 2008 நவம்பர் 26 அன்று மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகளுக்குத் தார்மீகப் பொறுப்பேற்று, 2008 நவம்பர் 30 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பாட்டீல், மும்பை பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பும் பயின்றவர். தேர்தல் அறிக்கை குழு, பொதுத்துறை நிறுவனங்களுக்கான குழு உள்ளிட்ட பல நிலைகளில் தலைமைப் பொறுப்பு வகித்துள்ளார்.

கண்ணியமான நடத்தைக்காக சிவராஜ் பாட்டீல் நன்கு அறியப்பட்டவர். பொதுமேடைகளிலோ அல்லது தனிப்பட்ட உரையாடல்களிலோ அவர் ஒருபோதும் தனிநபர் தாக்குதல்களில் ஈடுபட்டதில்லை. பரந்த வாசிப்பு, நுணுக்கமான ஆய்வு, தெளிவான கருத்துரைப்பு எனப் பல்துறை வித்தகராகத் திகழ்ந்தார்.

பிரதமர் இரங்கல்

மராத்தி, ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அவருக்கு இருந்த புலமையும், அரசியலமைப்புச் சட்டம் குறித்த அவரது அசாத்திய அறிவும் அவரை ஒரு மதிக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினராக மாற்றின.

சிவராஜ் பாட்டீலின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, "சிவராஜ் பாட்டீலின் மறைவு வருத்தமளிக்கிறது. நீண்ட கால பொது வாழ்வில் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய அமைச்சர், மகாராஷ்டிரா சட்டமன்ற சபாநாயகர் மற்றும் மக்களவை சபாநாயகர் என அனுபவம் வாய்ந்த தலைவராக அவர் விளங்கினார். சமூக நலனுக்குப் பங்களிப்பதில் அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. இந்த துயர நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் துயரத்தில் பங்கேற்கிறேன்" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+