இன்னும் 5 வருசம் தான்.. இந்தியாவில் பெட்ரோலுக்கு தேவையே இருக்காது.. நிதின் கட்கரி பூரிப்பு!
மும்பை: இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் பயன்பாடு இருக்காது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார்.
மகாராஷ்டிரா பல்கலைக்கழகத்தில் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதனை மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், பல்கலைக்கழக நிர்வாகிகள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

நிதின் கட்கரி பேச்சு
இந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் அதிகரித்து வரும் மின்சார வாகன பயன்பாடு, பெட்ரோல் - டீசல் பொருட்களின் எதிர்கால தேவை எப்படி இருக்கும் என்பது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசினார். அதில், இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் - டீசல் பொருட்களுக்கான தேவை இருக்காது. இதனைத்தொடர்ந்து நாட்டில் எரிபொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

பெட்ரோலுக்கான மாற்று
இதனால் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக பயோ எத்தனால் பயன்படுத்தப்படும் என்று கூறினார். ஏற்கனவே மகாராஷ்டிராவின் விதர்பா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பயோ எத்தனால் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் எதிர்காலத்தில் பயோ எத்தனால் பயன்படுத்தப்படும் என்று கூறினார்.

விவசாயிகள் பற்றி கட்கரி
இதுமட்டுமல்லாமல், எதிர்காலத்தில் ஆழ்துளை கிணற்று நீரில் இருந்து க்ரீன் ஹைட்ரஜன் தயாரித்து ரூ.70க்கு விற்பனை செய்யும் நிலை வரும். அதோடு விவசாயிகள் இனி உணவை மட்டும் வழங்குபவர்களாக மட்டும் இல்லாமல், இனி வரும் காலங்களில் எரிசக்தி வழங்குபவர்களாகவும் மாற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சத்தீஸ்கர் முன்னிலை
அண்மையில், சத்தீஸ்கர் அரசு 2022ம் ஆண்டுக்கான எலெக்ட்ரிக் வாகன கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் சத்தீஸ்கர் மாநிலத்தை மின்சார வாகனங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து உபகரணங்களுக்கான உற்பத்தி மையமாக மாற்றும் வகையில் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இதனால் இளைஞர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும், மாநில மின்சார வாகன பயன்பாடும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications