மகாராஷ்டிராவில் தொடரும் சோகம்.. மருத்துவமனையில் தீ விபத்து.. 4 நோயாளிகள் உடல் கருகி உயிரிழப்பு!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு இருந்த 20 நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மருத்துவமனையில் ஏற்படும் தொடர் தீ விபத்துகளால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா ஆட்டம்
இந்தியா முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா தொடர்ந்து ஆட்டம் போட்டு வருகிறது. தினசரி பாதிப்பு 3,50,000-ஐயும், தினசரி உயிரிழப்பு 3,000-ஐயும் தாண்டி செல்கிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சிகிச்சையளிக்க முடியாமல் மருத்துவமனைகள் திண்டாடி வருகின்றன.

ஆக்சிஜன் தட்டுப்பாடு
மேலும் கொரோனா தொற்று அதிகரிப்பதால் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. மேலும், பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன.

தொடரும் விபத்துகள்
ஏற்கனவே தொற்றை தடுக்க முடியாமல் நாடு திண்டாடி வரும் நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆக்சிஜன் சப்ளை திடீரென நிறுத்தப்பட்டதால் 24 பேர் பரிதாபமாக இறந்தனர். இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் அருகே வசாயில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 நோயாளிகள் உடல் கருகி உயிரிழந்தனர்.

மீண்டும் தீ விபத்து
இந்த நிலையில் மகாராஷ்டிராவில் மீண்டும் வேறு ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 நோயாளிகள் பலியாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மும்பை தானே பகுதியில் உள்ள பிரைம் கிரிடிகேர் மருத்துவமனையில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு திடீரென தீப்பிடித்தது. இதனால் அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

4 நோயாளிகள் உயிரிழப்பு
இதுபற்றிய தகவல் அறிந்ததும் மூன்று தீயணைப்பு வாகனங்கள், ஐந்து ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் 4 நோயாளிகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அவசர சிகிச்சை பிரிவில் இருந்த 6 நோயாளிகள் உள்பட 20 நோயாளிகள் அங்கு இருந்து மீட்கப்பட்டு வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications