விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழிப்பு: என் மகன் 3 நாட்களாக தூங்கவில்லை.. வக்காலத்து வாங்கும் தந்தை
மும்பை: விமானத்தில் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம் தொடர்பாக மும்பையைச் சேர்ந்த சங்கர் மிஸ்ரா பெங்களூரில் கைது செய்யப்பட்டார். இதனிடையே, தனது மகன் எந்த தவறும் செய்யவில்லை என்ற ரீதியில் சங்கர் மிஸ்ராவின் தந்தை பேட்டி அளித்துள்ளார். மேலும், அந்தப் பெண் பணம் கோரியதாகவும் அது அனுப்பப்பட்டதாகவும் தனது பேட்டியில் குற்றச்சாட்டு முன்வைத்து இருக்கிறார்.
நியூயார்க் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு கடந்த நவம்பர் மாதம் 26-ஆம் தேதி வந்த ஏர் இந்தியா விமானத்தில் 72 வயது பெண் ஒருவர் பயணித்தார். அதே விமானத்தில் 32 வயது இளைஞர் ஒருவரும் பயணித்தார்.
இந்த நிலையில், இரவு நேரத்தில் விமானத்தில் தூங்கிக்கொண்டிருந்தபோது 72 வயது மூதாட்டி மீது திடீரென ஏதோ தண்ணீர் விழுவது போல் இருந்துள்ளது. இதனால் திடுக்கிட்டு கண் விழித்து பார்த்த மூதாட்டி தன் மீது ஒருவர் சிறுநீர் கழித்து கொண்டிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
இதையடுத்து அந்த நபர் செய்த செயல் குறித்து அங்கிருந்த விமான பணியாளர்களிடம் மூதாட்டி கூறினார். இதன் பிறகு ஏர் இந்தியா நிறுவனத்திடமும் மூதாட்டி தெரிவித்துள்ளார். ஆனால் அந்த நபர் மீது யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மனவேதனையில் இருந்த மூதாட்டி இந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா இயக்குநருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். மேலும் இது தொடர்பாக சமூகவலைதளங்களிலும் பதிவிடப்பட்டது.

சங்கர் மிஸ்ரா
கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் தேதி நடந்த இச்சம்பவத்திற்கு பொதுவெளியில் பல்வேறு கண்டனங்கள் எழுந்தது. இந்நிலையில் இச்சம்பவத்துக்கு ஏர் இந்தியா நிறுவனம் முதல் காவல் துறை வரை நடவடிக்கை எடுக்கத் தொடங்கின. விசாரணையில் இந்த ஒழுக்கக் கேடான செயலில் ஈடுபட்ட நபர் மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ரா (எ) சஞ்சய் மிஸ்ரா என்பது தெரியவந்தது. இவர் அமெரிக்காவை சேர்ந்த நிதி நிறுவனத்தின் இந்திய துணைத்தலைவராக முக்கிய பொறுப்பில் பணிபுரிபவர் என்றும் தெரிய வந்தது.

உடைமைகளை சலவை செய்து கொடுத்தார்
இதையைத்து, சங்கர் மிஸ்ரா ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க 30 நாட்களுக்கு தடை விதித்து ஏர் இந்தியா உத்தரவிட்டது. இதற்கிடையே மூதாட்டியை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் இறங்கிய சங்கர் மிஸ்ரா தனது வழக்கறிஞர்கள் வாயிலாக சிறுநீர் கழித்த மூதாட்டியின் ஆடைகள் மற்றும் உடைமைகளை சலவை செய்து தந்தார். மேலும் இழப்பீடாக ஒரு தொகை அளித்தார். ஆனால் மூதாட்டி தரப்பில் சங்கர் மிஸ்ரா அளித்த அந்த தொகையை திருப்பி அனுப்பி விட்டனர்.

பணிநீக்கம்
இதையடுத்து சங்கர் மிஸ்ரா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ரா, அமெரிக்காவைச் சேர்ந்த அவரது நிறுவனமான வெல்ஸ் பார்கோவால் பணி நீக்கம் செய்யப்பட்டார். வெல்ஸ் பார்கோ இந்தியாவின் துணைத் தலைவர் சங்கர் மிஸ்ராவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் 'ஆழ்ந்த கவலையளிக்கிறது' .இந்த நபர் வெல்ஸ் பார்கோவிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறி உள்ளது.

சங்கர் மிஸ்ராவின் தந்தை பேட்டி
இந்த நிலையில், ஏர் இந்தியாவ் விமானத்தில் வயதான பெண்ணிடம் முறைகேடாக நடந்து கொண்ட சங்கர் மிஸ்ராவின் தந்தை தனது மகனின் செயலை நியாயப்படுத்தும் வகையில் தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். இது தொடர்பாக சங்கர் மிஸ்ராவின் தந்தையான ஷியாம் மிஸ்ரா கூறியதாவது:- இது முற்றிலும் தவறான வழக்கு ஆகும். எனது மகன் அமெரிக்காவில் இருந்து வந்து கொண்டிருந்தான். எனது மகன் 3 நாட்களாக தூங்கவில்லை. விமானத்தில் மது அருந்திவிட்டு தூங்கியிருக்கலாம். அதன்பிறகு என்ன நடந்தது என்பது அவனுக்கே தெரியாது.

மூதாட்டி தாயைப்போன்ற பெண்
இதை நிரூபிப்பது கடினம் தான். எனது மகன் அவ்வாறு (சிறுநீர் கழித்த சம்பவம்) செய்து இருப்பான் என்று நான் கருதவில்லை. அந்தப் பெண்ணுக்கு 72 வயது ஆகிறது. அவனது தாயைப்போன்ற பெண் அவர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியம் யாரும் இல்லை. அந்தப் பெண் பணம் கேட்டார். அது அனுப்பப்பட்டது. இன்னும் சில பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கலாம். எனவே அந்தப் பெண் புகார் தொடுத்து இருப்பார்" இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications