இதுவே முடியலன்னா.. 2024ல் எப்படி? - “நாங்க சொல்லல.. மக்கள் சொல்லுவாங்க” - கொளுத்திப் போட்ட சிவசேனா!
மும்பை : குடியரசுத் தலைவர் தேர்தலில் வலுவான வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகளால் முடியவில்லை எனில், இவர்களால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தகுதியான பிரதமரை எப்படி தர முடியும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழும் என சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களாக விவாதிக்கப்படும் கோபாலகிருஷ்ண காந்தி, ஃபரூக் அப்துல்லா ஆகியோருக்கு வலிமை இல்லை என்று சாம்னா தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி தேர்தலை தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும் என என சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா குறிப்பிட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தல்
குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் பாஜக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து விவாதிக்க கடந்த 15-ஆம் தேதி டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் மம்தா பானர்ஜி முன்னெடுப்பில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

சிவசேனா
இந்தக் கூட்டத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பங்கேற்கவில்லை. அன்று உத்தவ் தாக்கரே அயோத்தி சென்றதால் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என சிவசேனா முன்கூட்டியே அறிவித்தது. சிவசேனா கட்சி சார்பில் ஒருவர் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில், சரத் பவார் தான் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிற்கவில்லை என மறுத்ததால், கோபால கிருஷ்ண காந்தி, ஃபரூக் அப்துல்லா ஆகியோர் பெயர்களை கட்சிப் பிரதிநிதிகள் முன்வைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, வேட்பாளரை தேர்வு செய்யாமல் அந்தக் கூட்டம் நிறைவடைந்தது. அடுத்தகட்டமாக கூட்டங்கள் நடைபெறும் என திரிணாமுல் காங். தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர்
இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் தேர்வு விவகாரம் தொடர்பாக சிவசேனா அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில், குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்த மகாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா ஆகியோரின் பெயர்கள் அடிப்படுகின்றன. அவர்களால் குடியரசுத் தலைவர் தேர்தலில் கடும் போட்டியை கொடுக்க முடியாது. மறுபுறம் பாஜகவும் சிறந்த வேட்பாளரை நிறுத்தப்போவதில்லை.

ரொம்ப லேட்
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் 2, 3 பேர் மட்டுமே சேர்ந்து ராம்நாத் கோவிந்தின் பெயரை தேர்வு செய்தனர். இந்த ஆண்டும் அவர்கள் அப்படித்தான் செய்ய உள்ளனர். சரத்பவார் இல்லையெனில் வேறு யார்? இந்த கேள்விக்கான பதிலை 6 மாதத்திற்கு முன்பே தேடியிருக்க வேண்டும். அப்போது குடியரசுத் தலைவர் தேர்தலை எதிர்க்கட்சிகள் எவ்வளவு தீவிரமாக எடுத்து கொண்டு இருக்கிறது என்பது தெரிந்து இருக்கும்.

இதுவே முடியவில்லை என்றால்
குடியரசுத் தலைவர் தேர்தலில் வலுவான வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகளால் முடியவில்லை எனில், இவர்களால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தகுதியான பிரதமரை எப்படி தர முடியும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழும். மம்தா பானர்ஜி ஜனாதிபதி தேர்தலை, நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கிறார். எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி தேர்தலை தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும்.

விரும்புவதை செய்ய முடியவில்லை
குடியரசுத் தலைவர் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல. அரசியல் அமைப்பு, நீதி துறையின் காவலர். நாடாளுமன்றம், ஊடகம், நீதித்துறை மற்றும் நிர்வாகம் அதிகாரம் உள்ளவர்கள் முன் மண்டியிட்டு நிற்கிறது. நாட்டில் மத, சமூக மோதல்களும் அதிகரித்து உள்ளன. இந்த நேரத்தில் குடியரசுத் தலைவர் மவுனமாக இருக்கலாமா? ஆனால் குடியரசுத் தலைவர் இந்த விவகாரத்தில் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. ஜனாதிபதி நாற்காலியில் இருப்பவர் நாட்டிற்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். ஆனால் கடந்த சில காலமாக குடியரசுத் தலைவரால் அவர் விரும்புவதை செய்ய முடியவில்லை." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications