கொலிஜியம் பரிந்துரைகளை நிறுத்தி வைப்பதா? ஜனநாயகத்திற்கு பேராபத்து -முன்னாள் நீதிபதி நாரிமன்
கொலிஜியம் அமைப்புதான் நீதித்துறையின் சுதந்திரத்தை காப்பதாக கூறியுள்ள முன்னாள் நீதிபதி நாரிமன், அந்த சுதந்திரத்தை இழந்துவிடக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
மும்பை: உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் அமைப்பின் பரிந்துரைகளை நிறுத்தி வைப்பது இந்திய ஜனநாயகத்திற்கு பேராபத்தை ஏற்படுத்திவிடும் என முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி நாரிமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், நீதித்துறை தனது சுதந்திரத்தை இழக்குமேயானால், அன்றைக்கு இந்தியா இருண்ட காலத்திற்கு சென்றுவிடும் எனவும் அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
கொலிஜியம் முறை தொடர்பாக மத்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், நாரிமனின் இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அரசியல் சாசன அதிகாரத்தை உச்சநீதிமன்றம் பறித்துக்கொண்டது.. மத்திய சட்ட அமைச்சர் புது குற்றச்சாட்டு
கொலிஜியம் - வலுக்கும் மோதல்
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பதற்கும், அவர்களை பணியிடமாற்றம் செய்வதற்கும் 'கொலிஜியம்' என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. முழுக்க முழுக்க அரசின் தலையீடு இல்லாமல் இந்த அமைப்பு இயங்குகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே கொலிஜியம் அமைப்பை மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கடுமையாக விமர்சித்து வருகிறார். ஜனநாயகத்தில் ஒரு அமைப்பு இவ்வாறு தன்னிச்சையாக செயல்படக் கூடாது என்பதே அவரது விமர்சனத்தின் சாரம்சமாக உள்ளது. கிரண் ரிஜிஜுவின் இந்த விமர்சனத்திற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடுமையான எதிர்வினையாற்றி வருகின்றனர்.
நாரிமன் ஆவேசம்
இதனிடையே, கடந்த சில மாதங்களாக கொலிஜியம் பரிந்துரைக்கும் நீதிபதிகளின் பெயர்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடிப்பதாக தெரிகிறது. மேலும், சில நீதிபதிகளின் பெயர்களை மத்திய அரசு நிராகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் உச்ச நீதிமன்றம் - மத்திய அரசுக்கு இடையேயான மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மும்பை சட்டப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எப். நாரிமன் கலந்துகொண்டு ஆவேசமாக பேசினார். அவர் பேசியதவது:
"இருண்ட காலத்திற்கு சென்றுவிடுவோம்"
இந்திய நீதித்துறையின் பெருமையே அதன் சுதந்திரத்தன்மை தான். அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் கூட நீதித்துறைக்கு இந்த சுதந்திரம் வழங்கப்படவில்லை. இதன் காரணமாகவே, இந்தியாவில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. அரசு தங்கள் வரையறையை மீறி செல்லும் போதெல்லாம் அதை தடுத்து நிறுத்தும் அதிகாரத்தை நமது நீதித்துறை பெற்றிருக்கிறது. இந்த சுதந்திரத் தன்மையை கொலிஜியம்தான் உறுதி செய்து வருகிறது. ஒருவேளை, நீதித்துறையின் சுதந்திரம் வீழ்ந்துவிட்டால், இந்தியா புதிய இருண்ட காலத்தின் படுகுழிக்குள் விழுந்துவிடும் என்பதை யாரும் மறக்கக் கூடாது.
"இரண்டு விஷயங்கள் முக்கியம்"
நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் முறையை சட்டத்துறை அமைச்சர் கடுமையாக விமர்சித்து வருவதை நாம் அறிவோம். அவருக்கு நமது அரசமைப்புச் சட்டத்தின் இரண்டு அடிப்படையான விஷயங்கள் புரிந்திருக்க வேண்டும். ஒன்று, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள கூறுகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத 5 நீதிபதிகள்தான் (அரசியல் சாசன அமர்வு) விளக்கம் அளித்தும், உறுதி செய்தும் வருகிறார்கள். இரண்டு, அவ்வாறு அவர்கள் கொடுக்கும் உத்தரவை அரசமைப்புச் சட்டத்தின் 144-வது பிரிவின் படி நீங்கள் (அரசு) பின்பற்ற வேண்டும்.
"ஜனநாயகத்திற்கு பேராபத்து"
நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் கொலிஜியம் முறையை உறுதி செய்ய அரசியல் சாசன அமர்வை உச்ச நீதிமன்றம் நியமிக்க வேண்டும். கொலிஜியம் ஒரு நீதிபதியின் பெயரை பரிந்துரைத்தால், அரசு 30 நாட்களுக்குள் அதற்கு பதிலளிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், பரிந்துரைக்கப்பட்ட பெயர்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது இந்திய ஜனநாயகத்துக்கு முற்றிலும் எதிரானது. மேலும், ஜனநாயகத்திற்கு பேராபத்தை விளைவிக்கக் கூடியது. எனவே, கொலிஜியத்தால் தேர்ந்தெடுக்கப்படும் நீதிபதிகளை நியமனம் செய்ய குறிப்பிட்ட காலக்கெடுவை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உருவாக்க வேண்டும். இவ்வாறு நாரிமன் கூறினார்.