என் வீட்டை இடிக்க காட்டிய ஆர்வத்தை பிவாண்டியில் காட்டியிருந்தால் 41 உயிர் போயிருக்காது.. கங்கனா
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் கட்டட விபத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததற்கு முதல்வர் உத்தவ் தாக்கரே, சிவசேனா எம்பி சஞ்சய் ராவத், மும்பை மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோரின் கவனக்குறைவே காரணமாகும் என நடிகை கங்கனா ரனாவத் குற்றம்சாட்டியுள்ளார்.
அத்துடன் பாகிஸ்தான் நடத்திய புல்வாமா தாக்குதலில் வீரமரணடைந்தவர்களின் எண்ணிக்கையை விட பிவாண்டியில் இறந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும் என்றும் கங்கனா விமர்சித்துள்ளார்.
தாணே மாவட்டத்தை அடுத்த பிவாண்டியில் 1984ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு கட்டடத்தில் 40 வீடுகள் உள்ளன. இங்கு 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வந்தனர்.

அதிகாலை விபத்து
இங்கு கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அதிகாலையில் கட்டடம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் புதைந்தனர். இதுவரை 41 பேர் பலியாகிவிட்டனர். 20-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டனர்.

எண்ணிக்கை அதிகம்
இன்னும் மீட்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதுகுறித்து நடிகை கங்கனா ரனாவத் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் மும்பையில் என்ன நடக்கிறது என்பது கடவுளுக்கு தெரியும்? பிவாண்டியில் கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானதில் இறந்தவர்களின் எண்ணிக்கை புல்வாமா தீவிரவாத தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை காட்டிலும் அதிகமாகும்.

சிவசேனா எம்பி
இதற்கு காரணம் முதல்வர் உத்தவ் தாக்கரே, சிவசேனா எம்பி சஞ்சய் ராவத், மும்பை மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோரின் கவனக்குறைவே காரணம். மும்பையில் உள்ள எனது வீட்டை சட்டவிரோதமாக இடிப்பதை விட இந்த கட்டடத்தின் மீது மும்பை மாநகராட்சி கவனம் செலுத்தப்பட்டிருந்தால் இந்த சோகம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்றார்.

தற்கொலை சம்பவம்
சுஷாந்த் சிங் தற்கொலை சம்பவத்தில் கங்கனா மும்பை போலீஸை குற்றம்சாட்டியதிலிருந்து அவருக்கும் மும்பை அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த நிலையில் கங்கனாவின் கட்டடத்தின் ஒரு பகுதி சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக மும்பை மாநகராட்சி இடிக்கப்பட்டதை அடுத்து கங்கனா கேப் கிடைக்கும் போதெல்லாம் மகாராஷ்டிர அரசை விமர்சித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications