மும்பையில் 3-வது மீட்டிங்.. ‘இந்தியா’ கூட்டணியில் டமால்? பாஜக திரியை பற்ற வைப்பதாக சரத்பவார் புகார்!
மும்பை: "இந்தியா" கூட்டணியின் 3-வது ஆலோசனை கூட்டத்துக்குள் தேசியவாத காங்கிரஸ் கட்சியை பாஜக அணிக்கு இழுத்து செல்வதற்கான முயற்சிகள் படுஜோராக நடைபெறுவதை அக்கட்சியின் தலைவர் சரத்பவாரே பகிரங்கமாக தெரிவித்திருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
லோக்சபா தேர்தலுக்காக காங்கிரஸை உள்ளடக்கி 26 எதிர்க்கட்சிகள் உருவாக்கியது "இந்தியா" கூட்டணி இதுவரை பெரும்பாலான பந்துகளை சிக்சர்களாகவே அடித்து வருகிறது. இந்த கூட்டணியின் முதல் கூட்டம் பீகார் பாட்னாவிலும் 2-வது கூட்டம் கர்நாடகாவின் பெங்களூர் நகரிலும் நடைபெற்றது.

நாடாளுமன்றம்: இந்தியா கூட்டணியானது மணிப்பூர் விவகாரத்தில் நாடாளுமன்றத்தை முடக்கியது. அத்துடன் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து சரித்திரம் படைத்தது. இதன் மூலம் நாடாளுமன்றத்துக்கு வராமல் இருந்த பிரதமர் மோடியை வரவழைத்தது இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம். இத்தீர்மானத்தின் மீது லோக்சபாவில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற்றன. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் தலா 2 மணிநேரம் விவாதத்தில் பங்கேற்றுப் பேசினர்.
3-வது ஆலோசனை கூட்டம்: இந்தியா கூட்டணியின் 3-வது ஆலோசனைக் கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டம் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சரத்பவாரின் ரகசிய சந்திப்பு: இந்நிலையில் "இந்தியா" கூட்டணியின் பிரதான கட்சிகளில் ஒன்றான சரத்பவார் தலைமையிலான என்சிபியை முழுமையாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் இழுக்கும் முயற்சிகளை பாஜக தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கடந்த முறை பெங்களூர் கூட்டத்தின் போதே, திடீரென அதிருப்தி கோஷ்டியின் அஜித் பவார் உள்ளிட்டோர் சரத்பவாரை மும்பையில் சந்தித்து பேசினார். இதனால் பெங்களூர் கூட்டத்தில் சரத்பவார் பங்கேற்பாரா? என்கிற கேள்வி எழுந்தது. ஆனால் 2-ம் நாள் கூட்டத்தில் சரத்பவார் பங்கேற்றார்.
மீண்டும் ரகசிய சந்திப்புகள்: இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் சரத்பவார் பங்கேற்றது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போதும் அஜித்பவாருடன் சரத்பவார் ரகசிய ஆலோசனை நடத்தியிருப்பது தேசிய அளவில் விவாதப் பொருளாகி இருக்கிறது. ஆனாலும் அஜித்பவார் தமது அண்ணன் மகன்; அதனால் நீண்டநேரம் சந்தித்து பேசியதாக சரத்பவார் தரப்பு சொல்கிறது.
என்ன நடக்கும்?: அதேநேரத்தில், என்சிபியை முழுமையாக பாஜக பக்கம் இழுப்பதற்காக பாஜக தொடர்ந்து முயற்சித்து வருகிறது என்பதையும் சரத்பவார் பகிரங்கப்படுத்தி இருக்கிறார். நாகாலாந்து மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு என்சிபி ஆதரவு தருகிறது. நாகாலாந்து மாநில என்சிபி எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரும் அஜித்பவார் கோஷ்டியில் இணைந்துள்ளனர். இதனை முன்னுதாரணமாகக் காட்டியே ஒட்டுமொத்த என்சிபியையும் பாஜக அணிக்குள் இழுத்துவிட முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. மும்பையில் இந்தியா கூட்டணியின் 3-வது ஆலோசனை கூட்டம் நடைபெறுவதற்குள் என்சிபியை மொத்தமாக கூட்டணிக்குள் பாஜக இழுத்துவிடும் வாய்ப்புகள் அதிகம் என்கின்றன டெல்லி தகவல்கள்.












Click it and Unblock the Notifications