ஆட்சிக்கு ஆதரவு.. ஆனாலும் கையெழுத்து கூட போடவில்லை.. பாஜகவுடன் நெருக்கம் காட்டாத அஜித் பவார்!
மகாராஷ்டிராவில் பாஜக தலைமையில் துணை முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டாலும் என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் பாஜக கட்சியுடன் நெருக்கம் காட்டாமலே இருந்து வருகிறார்.
மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக தலைமையில் துணை முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டாலும் என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் பாஜக கட்சியுடன் நெருக்கம் காட்டாமலே இருந்து வருகிறார். பாஜக தலைவர்களுடன் அவர் பெரிதாக பேசுவதே கிடையாது.
நேற்று முதல்நாள் அதிகாலை பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி அமைத்தார். மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பாஜகவுடன் கூட்டணி வைத்தார். அஜித் பவார் துணை முதல்வராக பொறுப்பேற்றார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான தீவிரமான ஏற்பாடுகள் நடந்து வந்தது. ஆனால் திடீர் திருப்பமாக அங்கு மீண்டும் பாஜக கட்சி ஆட்சி பொறுப்பை ஏற்று இருக்கிறது.
ஆனால் என்ன
ஆனால் இவர் துணை முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டாலும், இன்னும் முழுமையாக பொறுப்பேற்கவில்லை. அவர் இன்னும் தன்னுடைய பணிகளை தொடங்கவில்லை. முக்கியமாக மும்பையில் தலைமைச்செயலகத்தில் உள்ள துணை முதல்வர் அலுவலகத்திற்கு கூட அவர் செல்லவில்லை.
கையெழுத்து
அதே சமயம் இன்னொரு பக்கம் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் தன்னுடைய பொறுப்புகளை தொடங்கிவிட்டார். முதல்வராக இன்னும் முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்து போட்டார். அதேபோல் அவர் இன்று முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் ஒதுக்குவதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.
செய்யவில்லை
இதில் துணை முதல்வரும் கையெழுத்திட வேண்டும். ஆனால் அவர் இதில் கையெழுத்து போடவில்லை. அதேபோல் பாஜக தலைவர்கள் யாருடனும் அஜித் பவார் பேச கூட இல்லை. பெரிதாக பாஜக உறுப்பினர்களுடன் அவர் நெருக்கம் காட்டாமல் ஒதுங்கியே இருந்தார்.
என்னாச்சு அவருக்கு
இது பல விதமான கேள்விகளை மகாராஷ்டிரா அரசியலில் எழுப்பி உள்ளது. ஏன் அஜித் பவார் இப்படி இருக்கிறார். உண்மையில் அவர் பாஜக ஆட்சிக்கு ஆதரவு தருகிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது.