சிதறு தேங்காயாக உடைந்த கட்சிகள்- எத்தனை "தலை"களுக்கு முடிவுரை எழுதுமோ மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்!
மும்பை: மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கும் என்கிற எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. இந்திய தேர்தல் ஆணையமானது ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டசபைகளுக்கான தேர்தல் தேதியை மட்டும் அறிவித்தது. 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே தற்போது வரை அரசியல் கட்சிகள் சிதறு தேங்காய் போல உடைந்து ஒவ்வொரு நாளும் அரசியல் குழப்பங்கள் அரங்கேறும் மாநிலமாக இருக்கிறது மகாராஷ்டிரா.
மகாராஷ்டிரா, ஹரியாணா சட்டசபைகளின் பதவிக்காலம் நவம்பர் 3, நவம்பர் 26-ல் முடிவடைகிறது. ஜார்க்கண்ட் சட்டசபை பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியில் முடிவடைகிறது. ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளாக சட்டசபை தேர்தல் நடைபெறவில்லை.

இதனையடுத்து மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை 3 மணிக்கு அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜம்மு காஷ்மீர், ஹரியானா சட்டசபை தேர்தல் தேதியை மட்டும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 145 இடங்கள். மகாராஷ்டிரா மாநிலத்தில் 2019-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அப்போதைய தேர்தலின் போது சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை பிளவுபடாமல் ஒருங்கிணைந்தவைகளாக இருந்தன.
2019-ம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள்:
பாஜக- 105
சிவசேனா -56
தேசியவாத காங்கிரஸ்-54
காங்கிரஸ்- 44
மஜ்லிஸ் கட்சி- 2
எம்.என்.எஸ்.- 1
2019-ம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்தே தொடங்கிய அரசியல் குழப்பங்கள் தற்போது வரை தொடருகின்றன. 2019-ல் பாஜகவும் சிவசேனாவும் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல்வர் பதவி விவகாரத்தில் இரு கட்சிகளிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை முதலில் உடைக்க முயற்சித்தது பாஜக. இந்த முயற்சி தோல்வி அடைந்தது.
இதனையடுத்து பாஜகவுடனான 25 ஆண்டுகால கூட்டணியை முறித்த சிவசேனா, பரம எதிரிகளான காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸுடன் கை கோர்த்து புதிய கூட்டணி ஆட்சியை அமைத்தது. அப்போது சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே, கூட்டணி அரசின் முதல்வரானார்.
இதை பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில் இருந்த பாஜக முதலில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனாவை இரண்டாக உடைத்தது. இதனால் உத்தவ் தாக்கரே ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதனையடுத்து ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக்கி புதிய கூட்டணி ஆட்சியை பாஜக அமைத்தது. சிவசேனாவைத் தொடர்ந்து மீண்டும் அஜித்பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸையும் உடைத்தது பாஜக. அஜித் பவார் தேசியவாத காங்கிரஸையும் கூட்டணி ஆட்சியில் இணைத்துக் கொண்டது பாஜக.
மகாராஷ்டிராவில் தற்போதைய நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, ஏக்நாத் ஷிண்டே சிவசேனா, அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் இடம் பெற்றுள்ளன. இந்தியா கூட்டணியில் உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் இடம் பெற்றிருக்கின்றன. அதேநேரத்தில் இரு கூட்டணிகளிலும் தொகுதிப் பங்கீடு, முதல்வர் வேட்பாளர் உள்ளிட்டவைகளில் பெரும் குழப்பம் இருந்து கொண்டே இருக்கிறது. ஆகையால் மகாராஷ்டிரா அரசியலில் தற்போதைய நிலவரம் அடுத்த சில மணிநேரங்களில் தலைகீழாகவும் மாறும் 'அதிசயம்' அரங்கேறவும் கூடும்.












Click it and Unblock the Notifications