மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி vs காங்கிரஸ் கூட்டணி.. 'போல் ஆப் போல்ஸ்' எக்ஸிட் போல் முடிவுகள் என்ன?
மும்பை: மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் இன்று அமைதியாக நடந்து முடிந்தது. தேர்தல் முடிந்ததையடுத்து எக்ஸிட்போல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் பாஜக கூட்டணியே வெற்றி பெறும் என கணிப்புகள் கூறி வருகின்றன. ஆனாலும் காங்கிரஸ் கூட்டணி வலுவான போட்டியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. போல் ஆப் போல்ஸ் கணிப்பில் பாஜக கூட்டணி 144 முதல் 164 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்துக்கு அடுத்தப்படியாக அதிக சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மாநிலமாக உள்ள மகாராஷ்டிராவில் மொத்தம் 288 தொகுதிகள் உள்ளன. இங்கு தற்போது பாஜக, சிவசேனா(ஷிண்டே அணி), என்சிபி (அஜித் பவார்) கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. இந்த சட்டசபையின் பதவி காலம் வரும் நவம்பர் 26-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து மகாராஷ்டிராவில் நவம்பர் 20-ந் தேதி (அதாவது இன்று) சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்த தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய ஆளும் 'மகாயுதி' கூட்டணி யும், காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) ஆகிய எதிர்க்கட்சிகள் அடங்கிய 'மகாவிகாஸ் அகாடி' கூட்டணியும் நேருக்கு நேர் போட்டியிட்டன.
இந்த தேர்தலில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற முனைப்பில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம் செய்தனர். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்தும் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
அதேநேரம் இந்தியா கூட்டணி சார்பில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, , தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி என பல தலைவர்கள் மகாராஷ்டிராவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. இந்தநிலையில் 288 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது. மொத்தம் உள்ள 9 கோடியே 70 லட்சத்து 25 ஆயிரத்து 119 வாக்காளர்களில் பலரும் காலை முதலே ஆர்வமுடன் வாக்களித்தனர். எத்தனை பேர் வாக்களித்தார்கள் என்ற முழு விவரம் இன்னமும் வெளியாகவில்லை. வாக்காளர்கள் ஓட்டுப்போட வசதியாக 1 லட்சத்து 186 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்தலில் மொத்தம் 1 லட்சத்து 64 ஆயிரத்து 996 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிந்த நிலையில் மின்னணு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது. வருகிற 23-ந் தேதி (சனிக்கிழமை) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அப்போது தான் யார் வென்றார்கள் என்பது தெரியவரும்.
எனினும் தேர்தல் முடிந்த பின்னர் பொதுவாக எக்ஸிட் போல் முடிவுகள் வெளிவருவது வழக்கம். அந்த வகையில் மகாராஷ்டிரா தேர்தல் முடிந்த நிலையில் இன்று எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. பெரும்பாலான கணிப்புகள் பாஜக கூட்டணியே மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கணித்துள்ளன. எனினும் காங்கிரஸ் கூட்டணியும் கணிசமாக வெல்லும் என்பதை கணிப்புகள் கூறியுள்ளன. அந்த வகையில் போல் ஆப் போல் எக்ஸிட் போல் கணிப்புகளின் படி, பாஜக கூட்டணி 144-164 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 118-138 இடங்களிலும் வெல்லும் என்றும் மற்ற கட்சிகள் ஆறு முதல் 10 இடங்களில் வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications