ம்ஹூம்.. இது சரிவரல. தொழிலை மாத்தப்போறேன். கடன் கொடுங்க.. விவசாயி சொன்ன விஷயத்தால் ஷாக் ஆன வங்கி!
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், விவசாயம் கைகொடுக்கவில்லை என்பதால் தொழிலை மாற்ற விரும்பி, வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
அதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா? இருக்கிறது. அந்த விவசாயி வங்கியில் கடன் கேட்டது ஹெலிகாப்டர் வாங்கி, வாடகைக்கு விட்டு சம்பாதிப்பதற்காகவாம்.
மதியம் 3 மணி முதல் அதிகாலை 1 மணி வரை நடந்த கூட்டம்! 10 மணி நேரம் என்ன ஆலோசித்தார் திருமாவளவன்!
ஹெலிகாப்டர் வாங்கி வாடகைக்கு விடுவதற்காக ரூ. 6 கோடியே 65 லட்சம் வங்கிக் கடன் கேட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயி
மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கைலாஷ் படாங்கே. 22 வயதான இவர் தனக்கு சொந்தமாக உள்ள இரண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், விவசாயம் லாபகரமானதாக இல்லை என்பதால் தொழிலை மாற்ற விரும்பி ஹெலிகாப்டர் வாங்க வேண்டும் என தங்கள் பகுதியில் உள்ள வங்கியின் கிளை ஒன்றில் கடன் கேட்டு அணுகியுள்ளார்.
அதிர்ந்த வங்கி ஊழியர்கள்
வழக்கமாக விவசாயிகள் விவசாயம் சார்ந்த பணிகளுக்காகத்தான் கடன் கேட்டு வங்கிகளை அணுகுவார்கள். ஆனால் இவரோ ஹெலிகாப்டர் வாங்க ரூ. 6 கோடியே 65 லட்சம் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார் கைலாஷ். ஹெலிகாப்டர் வாங்க கடன் கேட்டதால் வங்கி ஊழியர்கள் அதிர்ந்துள்ளனர். அவரை உட்கார வைத்து விசாரித்துள்ளனர்.
லாபம் கிடைக்கவில்லை
கைலாஷ் படாங்கே தன்னைப் பற்றிக் கூறுகையில், "எனக்கு சொந்தமாக 2 ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக எனது நிலத்தில் நான் சோயா பீன்ஸ் பயிரிட்டு வருகிறேன். ஆனாலும் மழை பொய்த்துப்போன காரணத்தால் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் ஏதும் கிடைக்கவில்லை. பயிர் காப்பீடு மூலம் உரிய இழப்பீடும் கிடைக்கவில்லை.
தொழிலை மாற்றுகிறேன்
அதனால் ஹெலிகாப்டரை வாங்கி, வாடகைக்கு விட்டு, வருமானம் பார்க்கலாம் என முடிவு செய்துள்ளேன். அதற்காகத்தான் வங்கியில் 6 கோடியே 65 லட்ச ரூபாய் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளேன். மற்ற தொழில்களில் போட்டி அதிகம் உள்ளது. அதனால் ஹெலிகாப்டர் வாடகை விடும் தொழிலை செய்யலாம் என முடிவு செய்துள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார் கைலாஷ்.