மகா. நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமா? எம்.எல்.ஏக்களுடன் பாஜக, காங்., தேசியவாத காங். தீவிர ஆலோசனை
மும்பை: மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் அடுத்தடுத்து கூட்டப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கூட்டணி அரசுக்கு எதிராக 40க்கும் மேற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான இந்த கூட்டணி அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் மகாராஷ்டிரா சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார். ஆனால் 16 அதிருப்தி எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது என்கிறது ஆளும் சிவசேனா. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் எதிர்க்கட்சித் தலைவரான பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ், பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். பட்னாவிஸ் வீட்டில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதேபோல் பாஜக ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏக்களும் பட்னாவிஸை சந்தித்து பேச உள்ளனர்.
இன்னொரு பக்கம், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டமும் கூட்டப்பட்டுள்ளது. நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதால் தங்களது எம்.எல்.ஏக்கள் அணிமாறிவிடாமல் தடுப்பதில் இந்த கட்சிகள் தீவிரமாக உள்ளது.
உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்தால், புதிய அரசு அமைப்பதில் பாஜக தீவிரம்காட்டும். அப்போது தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களையும் பாஜக வளைக்கக் கூடும் என கூறப்படுகிறது. இதனால் இன்று கூட்டப்படும் எம்.எல்.ஏக்கள் கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.