அரசு ஊழியர்கள் ஜீன்ஸ் -டி ஷர்ட் அணிந்து அலுவலகம் வரக் கூடாது... மஹாராஷ்டிரா அரசு அறிவுறுத்தல்..!
மும்பை: மஹாராஷ்டிராவில் அரசு ஊழியர்கள் ஜீன்ஸ் -டி ஷர்ட் அணிந்து அலுவலகம் வர வேண்டாம் என அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
தலைமைச் செயலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் பொதுமக்கள் அதிகம் வரும் இடங்கள் என்பதால் அதனை மனதில் கொண்டு அதற்கேற்றவாறு கண்ணியமான ஆடைகளை அணிந்து வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அரசு அலுவலர்கள் பார்மல் ஆடைகளில் பணிக்கு வருவதே உகந்தது எனக் கருத்து தெரிவித்துள்ளது மஹாராஷ்டிர மாநில அரசு. தனி மனித சுதந்திரத்தில் அரசு தலையிடுவதாக ஒரு புறம் குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் வேளையில் இதற்கு வரவேற்பும் கிடைத்துள்ளது.

அரசின் ஆடைக் கட்டுப்பாடாக எடுத்துக்கொள்ளாமல் ஒவ்வொரு அரசு ஊழியரும் தங்களது பொறுப்புணர்ந்து இந்த விவகாரத்தில் செயல்பட வேண்டும் என மஹாராஷ்டிரா அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே இதேபோன்ற ஒரு அறிவிப்பு ஏற்கனவே பீகாரில் வெளியிடப்பட்டு அது தற்போது நடைமுறையில் உள்ளது.
அரசு ஊழியர்கள் என்றாலே தலைநிறைய எண்ணெய், கட்டம் போட்ட சட்டை, கொடகொடவென்ற பேண்ட், கையில் சாப்பாட்டு பை, என்பது தான் ஒரு சில ஆண்டுகளுக்கு முன் வரை இருந்த அடையாளங்களாகும். இப்போது கால மாற்றத்திற்கேற்ப அரசு அலுவலர்கள் பலரும் தங்கள் பெர்சானலிட்டியை மாற்றிக்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
இதனிடையே ஜீன்ஸ் ஆடை என்பது குளிர் பிரதேசங்கள் மற்றும் குளிர் காலங்களில் அணிந்து கொள்வதற்காக ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட தடிமனான துணியாகும். நாளடைவில் ஜீன்ஸ் ஆண்களின் தவிர்க்க முடியாத ஆடையாக மாறியதுடன் பேஷன் டிசைனாகவும் உருவெடுத்தது.
நம் நாட்டில் கொளுத்தும் வெயிலில் ஜீன்ஸ் ஆடையை அணிந்துகொண்டு பலரும் படாதபாடு படுவதை பலரும் பார்த்திருக்க முடியும். அதிலும் குறிப்பாக சருமப் பிரச்சனைகள் இருப்பவர்களை பற்றி சொல்லவே தேவையில்லை. சருமத்தை கவ்வி பிடிக்கும் வகையிலான ஆடைகளை கூடுமானவரை தவிர்க்க வேண்டும் என்பது சரும நிபுணர்களின் கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications