ஒரே லாக்டவுன்..மகாராஷ்டிராவில் காப்பாற்றப்பட்ட 19,000 உயிர்கள்.. 38லட்சம் வரை குறைந்த வைரஸ் பாதிப்பு
மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் சுமார் 19 ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது; மேலும் 38 லட்சம் பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படுத்துவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா வைரசின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டிலுள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மூக்கு டூ வாய் டூ கண் டூ மூளை.. கடைசியில் மரணம்.. கருப்பு பூஞ்சை குறித்து அமர் அகர்வால் பகீர்!
கொரோனாவைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் சில மாநிலங்கள் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளன.
ஸ்தம்பித்து மகாராஷ்டிரா
கடந்த மாதம் மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்து. தினசரி வைரஸ் பாதிப்பு 60 ஆயிரத்தைத் தொட்டது. நாட்டின் பொருளாதார தலைநகராகக் கருதப்படும் மும்பையின் அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பத் தொடங்கின. கொரோனா 2ஆம் அலையின் மோசமான பாதிப்பால் அம்மாநிலமே முழுமையாக ஸ்தம்பித்து விட்டது
முழு ஊரடங்கிற்கு இணையான 144 உத்தரவு
நிலைமை கையை மீறிப் போவதைத் தடுக்க அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கடந்த ஏப்ரல் மாதம் மூன்றாவது வாரம் ஊரடங்கிற்கு இணையான 144 தடை உத்தரவை அமல்படுத்தினார். பொது போக்குவரத்து தடை, ஹோட்டல்களில் பார்சல் மட்டும் அனுமதி, கோயில்கள் மூடல் என மாநிலத்தில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. முதலில் மே 1 வரை அமல்படுத்தப்பட்ட இந்தக் கட்டுப்பாடுகள் பின், மே 15 வரை நீட்டிக்கப்பட்டன. இவற்றை அம்மாநில மக்கள் பெரும்பாலும் முறையாகவே பின்பற்றினர்
குறையும் வைரஸ் பாதிப்பு
இதன் பலன் மகாராஷ்டிராவில் தற்போது கண்கூடாகத் தெரிகிறது. 60 ஆயிரத்தைத் தொட்ட தினசரி வைரஸ் பாதிப்பு தற்போது 40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து 37,236ஆகப் பதிவாகியுள்ளது. கடந்த 41 நாட்களில் இதுதான் மிக குறைவாகும். அதேபோல மகாராஷ்டிராவில் தற்போது சுமார் 50 ஆயிரம் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது முன்பு கணிக்கப்பட்ட கொரோனா பாதிப்பை விடக் குறைவாகும்.
19 ஆயிரம் உயிர்கள்
சரியான நேரத்தில் முறையான திட்டமிடலுடன் மகாராஷ்டிராவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் மூலம் சுமார் 19,000 உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் 38 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தின் டாக்டர் சஷிகுமார் கணேசன் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்குத் தெரிவித்தார்.
கணிக்கப்பட்டதை விட மிகக் குறைவு
முன்னதாக, மே 9ஆம் தேதி அன்று மகாராஷ்டிராவில் கொரோனாவால் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95,300ஆக உயரும் எனக் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா உயிரிழப்பு 75,850ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல ஆக்டிவ் கேஸ்கள் 89 லட்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது 51 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக என்று பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது
சிறப்பான செயல்பாடு
முன்பு கணிக்கப்பட்டதை விட மகாராஷ்டிரா சிறப்பாகச் செயல்படுவதாகவும், ஆனால் அதேநேரம் தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கணிக்கப்பட்டதைவிட மிக மோசமாகச் செயல்படுவதாகவும் இந்திய அறிவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மாநிலங்களில் ஊரடங்கை அமல்படுத்தினால் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளைத் தடுத்து நிறுத்தலாம் என்றும் டாக்டர் சஷிகுமார் கணேசன் தெரிவித்தார்.
சிறிய நகரங்கள்
மகாராஷ்டிராவில் கட்டுப்பாடுகள் மிகக் கடுமையாகவும் முறையாகவும் பின்பற்றப்படும் பெருநகரங்களில் வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினும், சிறிய நகரங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் அங்கு ஏழு மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அம்மாநில உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.