ஓடும் காரிலேயே பாலியல் தொல்லை.. கதறிய பெண்ணின் 10 மாத குழந்தை ஜன்னல் வழி வீசி கொன்ற கும்பல்.. ஷாக்
மும்பை: மகாராஷ்டிராவில் ஓடும் காரில்(கேப்) டிரைவர், சகபயணிகளுடன் சேர்ந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த பெண்ணின் 10 மாத குழந்தையை ஓடும் காரில் இருந்து ஜன்னல் வழியே சாலையில் வீசி கொலை செய்துவிட்டு, அந்த பெண்ணையும் காரில் இருந்து தள்ளிவிட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பால்ஹர் மாவட்டத்தில் வசித்து வரும் பெண் தனது 10 மாத பெண் குழந்தையுடன் பெல்ஹர் பகுதியில் இருந்து வாடாதெஹ்சில் பகுதியில் உள்ள போசேர் பகுதிக்கு வாடகை காரில் (கேப்) சென்று கொண்டிருந்தார்.
இந்த காரில் மேலும் சில ஆண்கள் பயணித்தனர். இந்த கார் மும்பை-அமதாபாத் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி
இந்த வேளையில் கார் டிரைவர் உள்பட அதில் பயணித்த சிலர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றனர். இதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர்களை கடுமையாக கண்டித்து திட்டியுள்ளார். இருப்பினும் அந்த நபர்கள் விடவில்லை. இதனால் பெண்ணுக்கும், வாடகை காரில் பயணித்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

காரில் இருந்து வீசப்பட்ட குழந்தை
இதையடுத்து காரை நிறுத்தும்படி அந்த பெண் கூறியுள்ளார். டிரைவர் காரை நிறுத்தாமல் சென்றதாக சொல்லப்படுகிறது. இதனால் அந்த பெண் சத்தம் போட்டுள்ளார். இந்த வேளையில் கோபமடைந்த கொடூரர்கள் அந்த பெண்ணின் 10 மாத பெண் குழந்தையை தூக்கி ஓடும் காரில் இருந்து ஜன்னல் வழியே வீசி எறிந்துவிட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.இ தனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கதறி அழுதுள்ளார்.

இறந்துபோன குழந்தை
இதையடுத்து அந்த கும்பல் பாதிக்கப்பட்ட பெண்ணையும் ஓடும் காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு காரில் சென்றது. இதற்கிடையே காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட 10 மாத பெண் குழந்தை தலையில் அடிப்பட்டு இறந்து இருந்தது. மேலும் காரில் இருந்து தள்ளிவிடப்பட்ட அந்த பெண்ணும் படுகாயம் அடைந்து இருந்தார். பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கைது செய்ய தீவிரம்
மேலும் இறந்த குழந்தையின் உடலை கைப்பற்றிய போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் இந்திய தண்டனை சட்டம் 304 (கொலை) மற்றும் இந்திய தண்டனை சட்டம் 354(மானபங்கம்) ஆகிய பிரிவுகளின் கீழ் மாண்ட்வி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்னளர். விஜய் குஷ்வாகா உள்பட மேலும் சில பயணிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மகாராஷ்டிராவில் அதிர்ச்சி
ஓடும் காரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அவரது 10 மாத குழந்தையை ஜன்னல் வழியே தூக்கி வீசி கொலை செய்துவிட்டு, பெண்ணையும் காரில் இருந்து தள்ளிவிட்டு சென்ற சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் குற்றம் செய்த நபர்களை கைது செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என பலரும் வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications