உத்தவ் தாக்கரே உள்ளே.. அஜித் பவார் வெளியே.. 'அந்தர் பல்டிகளால்' அலறும் மகாராஷ்டிரா அரசியல்!
மும்பை: லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்தே மகாராஷ்டிரா மாநில அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. "இந்தியா" கூட்டணிக் கூட்டத்தை சிவசேனாவின் உத்தவ் தாக்கரே புறக்கணிக்க, பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தை என்சிபி அஜித் பவார் புறக்கணித்துள்ளதால் மகாராஷ்டிரா அரசியல் களம் அடியோடு மாறப் போவதாக தெரிகிறது.
லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆட்சி அமைக்க எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 240 இடங்களைப் பெற்ற பாஜக தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆதரவுடன் புதிய கூட்டணி ஆட்சியை அமைக்க இருக்கிறது.

சிவசேனா உடைப்பு: லோக்சபா தேர்தலுக்கு முன்னர் மகாராஷ்டிராவில் பாஜக பெரும் ருத்ரதாண்டவமாடி அம்மாநில அரசியலையே அதகளப்படுத்தியிருந்தது. உத்தவ் தாக்கரே தலைமையில் காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் இணைந்த கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. அப்போது உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவை இரண்டாக உடைத்தது பாஜக. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி கோஷ்டியில் சிவசேனாவின் எம்.எல்.ஏ.க்கள், எம்பிக்கள் அணி திரட்டப்பட்டனர். இதனையடுத்து உத்தவ் தாக்கரே ஆட்சி கவிழ்க்கப்பட்டு பாஜக- ஏக்நாத் ஷிண்டே கோஷ்டி இணைந்து புதிய ஆட்சி அமைந்தது.
என்சிபி உடைப்பு: அத்துடன் பாஜக நிற்கவில்லை. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸையும் உடைத்தது. சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் தலைமையில் அந்த கட்சியையும் உடைத்து அஜித் பவாரை துணை முதல்வராக்கியது பாஜக.
மகாராஷ்டிரா ரிசல்ட்: மகாராஷ்டிராவில் உடைக்கப்பட்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடனேயே லோக்சபா தேர்தலை பாஜக எதிர்கொண்டது. மகாராஷ்டிராவில் பாஜக எதிர்பார்த்த தேர்தல் முடிவுகள் கிடைக்காமல் பேரிடிதான் விழுந்தது.
மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் (மொத்தம் 48 இடங்கள்)
காங்கிரஸ் 13
பாஜக 9
உத்தவ் தாக்கரே சிவசேனா 9
சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் 8
ஏக்நாத் ஷிண்டே சிவசேனா 7
அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் 1
சுயேட்சை- 1
தோற்றுப் போன அஜித் பவார்: மகாராஷ்டிராவில் எதிர்பார்த்த தேர்தல் முடிவுகள் கிடைக்காமல் போனதுதான் மத்தியில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு பாஜக தள்ளாட வேண்டிய நிலைமைக்கான காரணங்களில் ஒன்று. இத்தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்திருப்பது தேசியவாத காங்கிரஸை உடைத்த அஜித் பவார் தான். பாராமதி தொகுதியில் சரத்பவார் மகள் சுப்ரியா சுலேவை எதிர்த்து மனைவியை நிறுத்தினார் அஜித் பவார். ஆனால் அஜித் பவார் மனைவி சுனித்ரா 1,58,333 வாக்குகள் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தார்.
அஜித் பவார்: இந்த நிலையில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக டெல்லியில் நேற்று நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார். மேலும் அஜித் பவாரை நம்பிப் போன தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 11 பேர் மீண்டும் சரத் பவார் அணிக்கே திரும்பப் போகின்றனராம்.
உத்தவ் தாக்கரே: இன்னொரு பக்கம், டெல்லியில் நாளை இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே பங்கேற்க மாட்டார்; புறக்கணிப்பார் எனவும் பாஜக கூட்டணிக்கே உத்தவ் தாக்கரே திரும்புவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸுடன் கூட்டணி அமைத்ததால் சொற்ப இடங்களில்தான் வெல்ல முடிந்தது; பாஜக கூட்டணிக்கே திரும்பலாம் என முடிவெடுத்துள்ளாராம் உத்தவ் தாக்கரே. இதனால் மகாராஷ்டிராவில் மட்டுமல்ல தேசிய அரசியலிலும் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications