நான் எங்கும் போகவில்லை.. "சிவசேனா பவனில்தான்" அமர்ந்து இருப்பேன்.. அடித்து பேசிய உத்தவ் தாக்கரே!
மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். முதல்வர் பதவியை துறந்த உத்தவ் தாக்கரே.. பதவி விலகும் பேஸ்புக் பக்கத்தில் உருக்கமாக உரையாற்றினார்.
Recommended Video
மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் உச்சம் தொட்டுள்ளது. சிவசேனா கட்சியை சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் ஆளும் மகா கூட்டணி எதிராக திரும்பியதால் அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டது. அரசுக்கு எதிராக அதிருப்தியில் இருக்கும் மகாராஷ்டிரா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் குஜராத்தில் உள்ள ரிசார்ட்டில் தங்கினார்.
பாஜகவுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே சிவசேனா அரசுக்கு ஆதரவு அளிக்க முடியும் என்று ஷிண்டே மற்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ராஜினாமா! நம்பிக்கை வாக்கெடுப்பு முன்பே பதவி துறப்பதாக அறிவிப்பு
தகுதி நீக்கம்
இதனால் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டது. குஜராத்தில் இருந்த ஷிண்டே பின்னர் தனது ஆதரவு எம்எல்எங்களுடன் அசாம் சென்றவர், அதன்பின் கோவாவிற்கு தனது எம்எல்ஏக்களுடன் விமானம் ஏறினார். இந்த நிலையில் அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய உத்தவ் தாக்கரே தரப்பு முயன்றது. ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 15 பேரை தகுதி நீக்கம் செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இவர்களுக்கு ஜூலை 12ம் தேதி வரை விளக்கம் கொடுக்க நேரம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக நாளையே உத்தவ் தாக்கரே தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார்.
எத்தனை எம்எல்ஏக்கள்
மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா - காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு 169 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் சிவசேனாவிற்கு 56 எம்எல்ஏக்கள் உள்ளனர். அங்கு பெரும்பான்மை பெற 145 எம்எல்ஏக்கள் தேவை. இப்போது 40 எம்எல்ஏக்கள் சிவசேனாவில் அதிருப்தியில் இருப்பதால் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது. உத்தவ் தாக்கரே தரப்பிற்கு அவரின் கட்சியில் இருந்து 15 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு அளித்தனர். இதனால் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் கண்டிப்பாக ஆட்சி கவிழும்.
தடை இல்லை
இதற்கு எதிராக உச்ச நீதிமன்ற படியேறிய உத்தவ் தாக்கரேவிற்கு அங்கும் தோல்வியே மிஞ்சியது. நாளை நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பை தடை செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்தது. இந்த நிலையில் நாளை ஆட்சி கவிழ்வது உறுதியான நிலையில், உத்தவ் தாக்கரே பதவி விலகுவதாக இன்று அறிவித்தார். அங்கு முதல்வர் பதவியை துறந்த உத்தவ் தாக்கரே.. பதவி விலகும் பேஸ்புக் பக்கத்தில் உருக்கமாக உரையாற்றினார்.
என்ன சொன்னார் ?
அதில், அவுரங்காபாத் நகரத்தை சம்பாஜி நகர் மற்றும் ஓஸ்மானாபாத் நகரத்தை தாராசிவ் என்று மாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நகரங்களுக்கு இந்த பெயரை வைக்க ஆசைப்பட்டது என் தந்தை தாக்கரேதான். தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் எனக்கு ஆதரவு அளித்தனர். என்னுடன் உடன் இருந்த அனில் பராப், சுபாஷ் தேசாய் மற்றும் ஆதித்யா தாக்கரே ஆகியோர், காங்கிரஸ் எம்எல்ஏக்கள், என்சிபி எம்எல்ஏக்கள் உடன் இருந்தனர். அவர்கள் எல்லோருக்கும் நன்றி.
மதிக்கிறோம்
உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்கிறோம். ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். அவர்கள் உத்தரவை மதித்து நான் என் எம்எல்சி பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்கிறேன். அதேபோல் முதல்வர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். நான் பதவிக்கு வந்ததே ஒரு எதிர்பார்க்காத நிகழ்வுதான். அதேபோல் நான் பதவியில் இருந்து செல்வதும் எதிர்பாராத நிகழ்வாக அமைந்துவிட்டது.
எங்கும் போகவில்லை
ஆனால் நான் எங்கும் செல்லவில்லை. நான் இங்குதான் இருக்க போகிறேன். நான் சிவசேனா பவனில்தான் இருக்க போகிறேன். அங்குதான் அமர்ந்து இருப்பேன். நான் என் மக்களை அழைப்பேன். அவர்களை சந்திப்பேன். அவர்களை ஒன்று திரட்டுவேன், என்று உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்வது முன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.