மகாராஷ்டிராவில் வீக்கெண்ட் லாக்டவுன்.. வெறிச்சோடிய சாலைகள்.. சென்னைக்கு மும்பை உணர்த்தும் பாடம்!
மும்பை: மகாராஷ்டிராவில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கள் காலை 7 மணி வரை கடுமையான லாக்டவுன் விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மும்பை மாநகரமே வெறிச்சோடி காணப்படுகிறது. கடைகள் திறக்கப்படவில்லை. சாலைகளில் வாகன போக்குவரத்தும் இல்லை. வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.
அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் செல்வோரை தவிர பிறரை போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர். மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவு பொருட்கள் சப்ளை, மருந்து சப்ளை செய்வோர் அனுமதிக்கப்படுகிறார்கள்.
தியேட்டர்கள் மூடல்
மகாராஷ்டிராவில் மருத்துவ, மளிகை, பழங்கள், பால் கடைகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் மட்டுமே திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர்கள் மற்றும் கலையரங்கள் மூடப்பட்டுள்ளது., ஆனால் கூட்டம் இல்லாமல் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்பு தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தடையில்லை
பேருந்துகள், ரயில்கள், டாக்சிகள் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் 50% திறனுடன் செயல்படுகிறது. தொழில்கள் மற்றும் நிறுவனங்கள் எந்த தடையும் இல்லாமல் தொடர்ந்து இயங்குகின்றன.
வீக்கெண்ட் ஊரடங்கு
மகாராஷ்டிரா மாநிலத்தில் கோவிட் -19 கேஸ்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த வார தொடக்கத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வார இறுதியில் ஊரடங்கு அமல்படுத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த வாரம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடும் கட்டுப்பாடுகள்
அதிகாரிகள் வெளியிட்ட உத்தரவில், பொதுமக்கள் தொலைபேசியில் அழைத்து ஆர்டர் கொடுத்து ஹோட்டல் மற்றும் உணவகங்களில் உணவுகளை பெற அனுமதிக்கப்படுகிறார்கள். இதனிடையே வார இறுதி ஊரடங்கை தவிர, திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது., இதன் ஷாப்பிங் மால்கள், பார்கள், உணவகங்களில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.
உணர்த்தும் பாடம்
மகாராஷ்டிராவில் நிலைமை மோசமாகி உள்ளதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால். தமிழகத்தில் மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி நடக்காவிட்டால் இதேபோன்று ஊரடங்கு கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளும் அபாயமும் உள்ளது. மும்பையில் போடப்பட்டுள்ள முழு லாக்டவுன் உணர்த்தும் பாடத்தை உணர்ந்து பொறுப்புடன் செயல்படுவதே நமக்கு நிம்மதியான சூழலுக்கு வழிவகுக்கும்