”இந்தியா” கூட்டணி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே; ஒருங்கிணைப்பாளர் ரேஸில் நிதிஷ், ஸ்டாலின், மமதா!
மும்பை: "இந்தியா" கூட்டணியின் தலைவராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நியமனம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேநேரத்தில் கூட்டணியின் ஒருங்கிணைப்பாள பதவிக்கு நிதிஷ்குமார், மு.க.ஸ்டாலின், மமதா பானர்ஜி ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன.

"இந்தியா' கூட்டணியின் 3-வது கூட்டத்தில் பங்கேற்பதற்காக 60க்கும் மேற்பட்ட தலைவர்கள் மும்பையில் குவிந்துள்ளனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட 6 மாநில முதல்வர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

மும்பையில் நேற்று முதல் "இந்தியா" கூட்டணி தலைவர்கள் திரண்டு வருவதால் மாநகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. மும்பையில் இன்று இரவு முதல் நாளை வரை இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.

இந்தக் கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் தலைவர் பதவி, ஒருங்கிணைப்பாளர் பதவி யாருக்கு என்பது தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பெயர்தான் முதலில் அடிபட்டது. அதன் பின்னர் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரது பெயர்களும் அடிபட்டன. அதேநேரத்தில் தலைவர் பதவிக்கு சோனியா அல்லது ராகுல் காந்தி பெயர்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

தற்போது "இந்தியா" கூட்டணி தலைவராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நியமிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக காங்கிரஸ் வட்டாரங்களில் விசாரித்த போது, பொதுவாக கூட்டணிகளில், ஒருங்கிணைப்பாளர் என்றாலே அதில் ஒருவர் பிரதமர் வேட்பாளர் என்ற கருத்து உருவாகிவிடும். தற்போது மல்லிகார்ஜூன கார்கேவை தலைவராக நியமிக்க முடிவு செய்துள்ளனர்; அதேபோல ஒருங்கிணைப்பாளராக மூன்று முதல்வர்களில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என்கின்றன.












Click it and Unblock the Notifications