கண் பார்வையற்ற தாய்.. தண்டவாளத்தில் 6 வயது மகன்.. நாடே பாராட்டும் ரயில்வே ஊழியரின் துணிச்சல் செயல்
மும்பை: மகாராஷ்டிராவில் தண்டவாளத்தில் தவறுதலாக விழுந்த கண் பார்வையற்ற பெண் ஒருவரின் மகனைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியரைப் பலரும் பாராட்டி வருகின்றனர். அவரது துணிச்சலைப் பாராட்டி ஆசியப் போக்குவரத்து மேம்பாட்டு நிறுவனம் அவருக்கு 50,000 ரூபாயையும் ஜாவா நிறுவனமும் புதிய பைக் ஒன்றை பரிசளிப்பதாக அறிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்திலுள்ள பொதுப் போக்குவரத்துகள் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆள்நடமாட்டமில்லாத ரயில் நிலையம் ஒன்றில் கண் பார்வையற்ற பெண் ஒருவரின் 6 வயது மகனை ரயில்வே ஊழியர் காப்பாற்றிய வீடியோ வைரலானது. அந்த ஊழியரின் வீரத்தை நாடே பாராட்டி வருகிறது.

ரயில்வே ஸ்டேஷன்
மகாராஷ்டிர தலைநகர் மும்பை அருகே உள்ள வாங்கனி ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைமேடையில் கண் பார்வையற்ற பெண் ஒருவர், தனது 6 வயது மகனுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். தாயின் அருகிலேயே நடந்து வந்து கொண்டிருந்த அந்தச்சிறுவன், எதிர்பாராத விதமாக திடீரென நிலைதடுமாறி தண்டவாளத்தில் விழுந்தான்.

திக் திக் நொடிகள்
தண்டவாளத்தில் விழுந்த சிறுவன் விரைந்து மேலே ஏற முயன்றான். கண் பார்வையில்லாததால் அப்பெண்ணால் தனது குழந்தை எங்கே இருக்கிறது என்பதைக் கண்டறிய முடியவில்லை. இதனால் அப்பெண் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அச்சிறுவனும் எப்படியாவது மேலே ஏறிவிட வேண்டும் என முயன்று கொண்டிருந்தார். அப்போது அந்த தண்டவாளத்திலேயே ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.

ரயில்வே ஊழியரின் பேருதவி
இதைப் பார்த்ததும் அச்சிறுவன் பயத்தில் கத்த தொடங்கினான். 144 தடை உத்தரவு காரணமாக ரயில் நிலையத்திலும் பயணிகள் யாரும் இல்லை. நிமையின் தீவிர தன்மையை உணர்ந்த மயூர் ஷெல்கே என்ற ரயில்வே ஊழியர், தன் உயிரை துட்சமென கருதி, அச்சிறுவனைக் காக்க, மின் வேகத்தில் ரயில் வரும் அதே தண்டவாளத்தில் துணிச்சலாக ஓடி வந்தார். அச்சிறுவனைச் சரியான நேரத்தில் பிளாட்பாரத்தில் தூக்கிவிட்டார். அவரும் ஏறினார்.

பலரும் பாராட்டு
அவர் பிளாட்பாரத்தில் ஏறிய ஒரு சில நொடிகளில் அந்த ரயில் படுவேகமாக அந்த இடத்தைக் கடக்கிறது. சரியான நேரத்தில் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலும் அந்த ஊழியரைப் பாராட்டி உள்ளார். மேலும், ரயில்வே ஊழியரின் துணிச்சலைப் பாராட்டி ஆசியப் போக்குவரத்து மேம்பாட்டு நிறுவனம் அவருக்கு ரூ. 50,000ஐ அறிவித்துள்ளது. மேலும், ஜாவா நிறுவனமும் அவருக்கு புதிய பைக் ஒன்றை பரிசளிப்பதாக அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications