மராத்தா சமுதாயத்திற்கு 16% இட ஒதுக்கீடு.. வரலாற்று சிறப்புமிக்க சட்டம் நிறைவேறியது
Recommended Video
ம்பை: மராத்தா சமுதாயத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 16 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையிலான சட்டம், மகாராஷ்டிர மாநில சட்டசபையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்த மக்கள் தொகையில் சுமார் 30 சதவீதம் மராத்தா இனத்தவர்கள் ஆகும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தங்கள் இனத்திற்கு 16 சதவீதம் இட ஒதுக்கீடு கோரி நீண்டகாலமாக போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.
கடந்த ஜூலை மாதம் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையாக மாறியது நினைவிருக்கலாம்.
இதையடுத்து மராத்தா சமுதாயத்தினரின், கல்வி சமூக மற்றும் பொருளாதார நிலை குறித்து, பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஆய்வு நடத்தி அதன் அறிக்கையை சில தினங்களுக்கு முன்பாக மகாராஷ்டிரா மாநில தலைமைச் செயலாளரிடம் வழங்கியது.
இந்த அறிக்கையில் மராத்தா சமுதாயத்தினர் சமூகம் மற்றும் கல்வி விஷயங்களில் பின்தங்கி இருப்பது உண்மைதான் என்று தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட மகாராஷ்டிர மாநில அரசு, மராத்தா, சமுதாயத்தினருக்கு 16 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையிலான சட்ட மசோதாவை இன்று, தாக்கல் செய்தது.
இந்த சட்ட மசோதா, ஒருமனதாக நிறைவேறியது. சட்ட மசோதாவை தாக்கல் செய்த, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், குழப்பமின்றி சட்டம் நிறைவேறுவதற்கு வழிவகை செய்த எதிர்க்கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். இதன் மூலம் நீண்ட காலமாக மகாராஷ்டிராவில் நிலவிவந்த பதட்டமான சூழ்நிலை முடிவுக்கு வந்துள்ளது.