தமிழர் வாழும் தாராவியில் கிடுகிடுவென உயரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை- 200ஐ தாண்டியது; 13 பேர் பலி
மும்பை: பல லட்சம் தமிழர்கள் வாழும் மும்பை தாராவியில் கொரோனாவின் பாதிப்பு உக்கிரமடைந்துள்ளது. தாராவியில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200 ஐ கடந்துள்ளது. மொத்தம் 13 பேர் பலியாகி உள்ளனர்.
Recommended Video
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாரவிதான் பல லட்சம் தமிழர்களின் தாய்வீடு. குறுகிய வீடுகளுக்குள் குடித்தனம், பொதுக்கழிப்பிடங்களே துணை என்று வாழ்ந்த தாராவியை சொந்த தேசமாக கொண்டாடிய தமிழர்கள் உள்ளிட்டோர் இப்போது பெருந்துயரில் தவிக்கின்றனர்.

கொரோனாவைத் தடுக்க கடைபிடிக்க வேண்டிய தனிநபர் இடைவெளி என்பதை கிஞ்சித்தும் கடைபிடிக்கவே முடியாத நெரிசலான வாழ்விடப் பகுதி தாராவி. பல லட்சம் மக்கள் வசித்தாலும் நூறுகள் எண்ணிக்கையில்தான் பொது கழிப்பிடங்கள். இவைபோன்ற காரணங்களால் தாராவி மிகப் பெரும் இன்னலை சந்திக்கப் போகிறது என தொடக்கம் முதலே பலரும் எச்சரித்தனர்.
இப்போது தாராவியில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்போர் எண்ணிக்கை 200ஐ தாண்டியது. தாராவியில் உயிரிழந்திருப்போர் எண்ணிக்கை 13 ஆகவும் உயர்ந்துள்ளது.
லாக்டவுன் அமலில் உள்ளதால் அன்றாட வாழ்வாதாரம் எதுவும் இல்லாமல் பரிதாப நிலையில் உள்ளனர் தாராவி தமிழர்கள். தாங்கள் பிற சொந்த மண்ணுக்கு திரும்பவும் வழியில்லை என தத்தளிக்கின்றனர் இந்த தமிழர்கள்.
இதனிடையே மும்பை தாராவியில் கொரோனா தொற்று அதிகரிக்க காரணமே பொது கழிப்பிடங்கள்தான்; ஆகையால் புதிய கழிப்பிடங்களை இடைவெளியுடன் அமைப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் புன்யா ஶ்ரீவத்சவா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications