காரை விற்று 250 ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கிக் கொடுத்த இளைஞர்.. குவியும் பாராட்டுகள்!
மும்பை: மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்று கூறுவார்கள். அதைத்தான் மும்பைச் சேர்ந்த இளைஞர் செய்து காட்டியுள்ளார். தனது எஸ்யூவி காரை விற்று 250 பேருக்கு இலவசமாக ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கிக் கொடுத்துள்ளார்.
இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிகளவில் கொரோனா நோய் தொற்று பரவி வருகிறது. தினமும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 3000த்தை கடந்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று வரை 1,39,010 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து ஒரு நாள் உயிரிழப்பு 248 என்ற அளவில் அதிகரித்து, இன்று வரை 6,531 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாநிலத்தில் அடுத்த கட்டமாக நோய் தொற்றை கட்டுப்படுத்த ஆண்டிஜென் எனப்படும் நோய் எதிர்ப்பு பரிசோதனை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர். இதற்கான கருவிகளை தனியார் நிறுவனங்களிடம் இருந்து விரைவில் வாங்கி பரிசோதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அருமையான தானம்
இந்த நிலையில் மலாட் பகுதியைச் சேர்ந்த 31 வயது ஷாநவாஸ் ஷைக் தனது எஸ்யூவி காரை விற்று 250 பேருக்கு இலவசமாக ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கிக் கொடுத்துள்ளார். இவர் தனது போர்டு எண்டவர் காரை ஆம்புலன்சாகவும் பயன்படுத்தி வருகிறார். கடந்த மே 28 ஆம் தேதி இவரது தொழில் கூட்டாளியாக இருந்த கர்ப்பிணி பெண் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார்.

பறி போன உயிர்
இவரை 5 மருத்துவமனைகளில் ஏற்றுக் கொள்ள மறுத்த நிலையில் ஒரு மருத்துவமனைக்கு வெளியே ஆட்டோவிலேயே உயிரிழந்துள்ளார். அந்தப் பெண்ணை அவரது கணவர்தான் 5 மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அனைத்து மருத்துவமனைகளும் மறுத்துவிட, ஆறாவது மருத்துவமனைக்குள் நுழைவதற்கு முன்பு ஆட்டோவில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் ஷாநவாஸை மிகவும் பாதித்துள்ளது.

காரை விற்று ஆக்சிஜன் சிலிண்டர்கள்
தனது மருத்துவ நண்பர்களை ஷாநவாஸ் அணுகி, தனது தொழில் கூட்டாளியின் மரணம் குறித்து குறிப்பிட்டுள்ளார். ஆக்சிஜன் சிலிண்டர் இருந்து இருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்தே தனது எஸ்யூவி காரை விற்று ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களுக்கு ஜூன் 5 ஆம் தேதி இலவசமாக வழங்கியுள்ளார்.

டோர் டெலிவரி
ஆக்சிஜன் சிலிண்டர் வேண்டுவோரிடம், மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு சரிபார்த்து, அவர்களே வந்து வாங்கிச் செல்ல அறிவுறுத்தியுள்ளார். குடும்பத்தினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில், தன்னார்வலர்கள் ஆக்சிஜன் சிலிண்டர்களை டெலிவரி செய்துள்ளனர். எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த பயிற்சியும் அளித்துள்ளனர். இவரது சேவையை மும்பை மக்கள் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications