மும்பையில் கணிசமாக குறைந்த கொரோனா பாதிப்பு- மிரட்டிய 3வது அலை ஓய்கிறதா?
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு கணிசமாக குறையத் தொடங்கி உள்ளது. இதனால் மும்பையை மிரட்டி வந்த கொரோனா 3-வது அலை ஓயத் தொடங்கிவிட்டதாகவே கருதப்படுகிறது.
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.60 லட்சத்தை தாண்டியதாக பதிவாகி உள்ளது. கடந்த 208 நாட்களில் இதுதான் அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கையாகும்.

மகாராஷ்டிராவில் அதிகம்
நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு, ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்தது மகாராஷ்டிராவில்தான்.

மும்பையில் குறைந்தது
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மாநகரில் டிசம்பர் 24-ந் தேதி ஒருநாள் கொரோனா பாதிப்பு வெறும் 204 ஆக இருந்தது. ஆனால் அதற்கு அடுத்த சில நாட்களில் இந்த எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. அதிகபட்சமாக ஜனவரி 7-ந் தேதியன்று மட்டுமே 20,971 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கொரோனா 3-வது அலையின் அதி உச்சமாகும் இது.

கொரோனா 3-வது அலை
இந்நிலையில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்தும் வருகிறது. ஆனால் மிக அதிகமான பாதிப்பு இருந்த மும்பை மாநகரில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கி உள்ளது. இன்று மும்பையில் 11,647 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. முந்தைய நாளை ஒப்பிடுகையில் இது 21% குறைவாகும். இதனால் கொரோனா 3-வது அலை மும்பையில் பலவீனமடையத் தொடங்கிவிட்டதாகவே கருதப்படுகிறது.

பிற மாநிலங்களில்...
கர்நாடகாவில் இன்று 14,473 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 15,000-த்தை தாண்டியது. தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்தனர். மேற்கு வங்க மாநிலத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21,098. ஹரியானாவில் 5,746; ஜம்மு காஷ்மீரில் 1,148 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. கோவா மாநிலத்தில் 2,476 பேருக்கும் கேரளாவில் 9,066 பேருக்கும் இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. மும்பையைப் போல நாட்டின் பிற நகரங்களிலும் கொரோனா பாதிப்பு இனிவரும் நாட்களில் குறைவதற்கு சாத்தியங்கள் இருக்கின்றன எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications