குழந்தை பிறக்க.. பொதுமக்கள் மத்தியில் மனைவியை நிர்வாணமாக குளிக்க வைத்த கணவன்.. ஷாக் சம்பவம்
மும்பை: மகாராஷ்டிராவில் ஆண் குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என்பதற்காக மவுலானா கூறியதை தொடர்ந்து அருவியில் பொதுமக்கள் மத்தியில் மனைவியை நிர்வாணமாக குளிக்க வலியுறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர் 30 வயது பெண். இவருக்கும் தொழில் அதிபர் ஒருவருக்கும் திருமணம் முடிந்தது. துவக்கத்தில் தம்பதி இடையே நல்ல உறவு இருந்தது. இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் தான் அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லை என குடும்பத்தினர் குற்றம்சாட்டி துன்புறுத்த துவங்கினர்.

மனம், உடல் ரீதியாகவும் துன்புறுத்தல்
அதாவது கடந்த 2013ம் ஆண்டில் கூடுதலாக வரதட்சணை வாங்கி வர வேண்டும் என்று அந்த பெண்ணிடம் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் துன்புறுத்தினர். மேலும் ஆண் குழந்தை பெற்று கொடுக்கவில்லை எனக்கூறி அடித்து உதைத்துள்ளனர். இதற்கிடையே ஆண் குழந்தைகள் பெற்றெடுக்க மந்திரவாதிகள் கூறியதாக சில செயல்களை அந்த பெண்ணுக்கு அவரது கணவரின் குடும்பத்தினர் செய்துள்ளனர். இதனால் அவர் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தலுக்கு ஆளானார்.

மவுலானா அறிவுரை
இதனால் அந்த பெண் விரக்தி அடைந்தார். இந்நிலையில், தான் மவுலானா பாபா ஜமாதர் என்பவரை கணவரின் குடும்பத்தினர் அணுகினர். அப்போது அவர், ‛‛அருவியில் அந்த பெண்ணை பொதுமக்கள் மத்தியில் நிர்வாணமாக குளிக்க செய்தால் ஆண் குழந்தை பிறக்கும். அதோடு மட்டுமின்றி கணவரின் தொழிலும் வளர்ச்சி அடையும்'' என கூறியுள்ளார்.

நிர்வாண குளியலுக்கு வற்புறுத்திய குடும்பம்
இதை உண்மை என நம்பிய அவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என அந்த பெண்ணை கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் ராய்காட் மாவட்டத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அருவியில் பொதுமக்கள் முன்னிலையில் நிர்வாணமாக குளிக்க வலியுறுத்தினர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் மறுப்பு தெரிவித்தனர். மேலும் அவர் சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தார்.

புகாரில் இருப்பது என்ன?
இந்த புகாரில் பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் கூறியுள்ளார். ஆண் குழந்தை வேண்டி மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தி வருவதோடு, வரதட்சனை கொடுமை செய்கின்றனர். மேலும் கணவரின் தொழிலுக்காக தனது சொத்துகளின் பெயரில் ரூ.75 லட்சம் கடனுக்காக கையெழுத்திடும்படி வலியுறுத்தி வருகின்றனர் என கூறியுள்ளார்.

கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளனர். புகார் அளித்த பெண்ணின் கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் 2 பேர், மவுலானா பாபா ஜமாதர் என 4 பேர் மீது புனேவின் பார்தி வித்யாபீடம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications