ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்.. பின்னணியில் பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள்?
மும்பை: நமது நாட்டின் ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு நேற்றைய தினம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. தன்னை லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் என்று கூறிக்கொண்ட நபர், ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நமது நாட்டின் பொருளாதாரத்தைக் கையாள்வதில் ரிசர்வ் வங்கிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் பணவீக்கம், விலைவாசி உயர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி எடுக்கும் முடிவு நாடு முழுக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

ரிசர்வ் வங்கி: இந்த ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையம் மும்பையில் இயங்கி வருகிறது. நேற்றைய தினம் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு ஒரு கால் வந்துள்ளது. அப்போது எதிர்முனையில் பேசிய நபர் தன்னை லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் என்று கூறியுள்ளான். மேலும், ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவில் நடந்த மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதலாக அறியப்படும் 2008 மும்பை தாக்குதலின் பின்னணியில் இந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பே இருந்தது. அதே அமைப்பின் பெயரைச் சொல்லி மும்பையில் உள்ள ஆர்பிஐ உதவி மையத்திற்கு வந்த இந்த வெடிகுண்டு மிரட்டல் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

என்ன நடந்தது: நேற்று சனிக்கிழமை காலை 11 மணியளவில் ஹெல்ப்லைன் எண்ணுக்கு இந்த அழைப்பு வந்துள்ளது. ரிசர்வ் வங்கியை வெடிகுண்டு மூலம் வெடிக்கச் செய்யப் போவதாக அந்த நபர் மிரட்டியிருக்கிறார். . தன்னை லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் என்று கூறிக் கொண்ட அந்த நபர், வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதற்கு முன்பு பாடல் ஒன்றையும் பாடியதாகக் கூறப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் வளாகம் முழுக்க சோதனை செய்யப்பட்டதில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் குறித்து இப்போது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தொடரும் போலி மிரட்டல்கள்: கடந்த இரண்டு மாதங்களாகவே பல நூறு விமானங்களுக்குத் தொடர்ச்சியாகப் போலி வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் விமானங்கள் அடிக்கடி தரையிறக்கப்பட்டு சோதனை செய்யப்படுகிறது. இது பயணிகளுக்குப் பயத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி, அவர்கள் நேரத்தையும் வீணடிக்கிறது. இதுபோன்ற மிரட்டல் வரும் போது விமானத்தைத் தரையிறக்கி சோதனை செய்ய வேண்டி இருக்கிறது. இது விமான நிறுவனங்களுக்குத் தேவையில்லாத நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.
கடந்த வியாழக்கிழமை கூட நாக்பூரிலிருந்து கொல்கத்தா செல்லும் இண்டிகோ விமானம் வெடிகுண்டு மிரட்டலால் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. மத்திய அரசு இந்த போலி மிரட்டலைத் தடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த போலி மிரட்டல்கள் பொதுமக்களைப் பாதிப்பது மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிப்பதாகத் தகவல் தொடர்பு அமைச்சகம் கவலை தெரிவித்து இருந்தது. இந்தச் சூழலில் ரிசர்வ் வங்கிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரைக் கண்டறியும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். இதுபோல போலியாக வெடிகுண்டு மிரட்டல் விடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications