பாகிஸ்தானை 2 நாடாக உடைத்தெறிந்த இந்திரா காந்தியின் பேத்தி பிரியங்கா.. மறந்து விடாதீர்கள்: சிவ சேனா
மும்பை: காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, தனது பாட்டி இந்திரா காந்தி போல தைரியசாலி என்று சிவசேனா பாராட்டு தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியை லக்கிம்பூர் கேரிக்கு வருமாறு பிரியங்கா அழைத்த நிலையில், சிவசேனாவின் செய்தித்தாள் சாம்னாவில் பிரியங்கா காந்தியை பாராட்டி தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.
சாம்னா, தலையங்கத்தில் மறைந்த தனது பாட்டி இந்திரா காந்தியைப் போலவே பிரியங்கா காந்தி தைரியசாலி என்று கூறப்பட்டுள்ளது.

பாஜக மாஜி கூட்டணி கட்சி
பாரதிய ஜனதாவின் முன்னாள் கூட்டாளி கட்சிதான் சிவசேனா. இருப்பினும் மகாராஷ்டிராவில் முதல்வர் யார் என்பதை தீர்மானிப்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசோடு சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது.

பிரியங்கா காந்தி கைது
இந்த நிலையில், உ.பி. லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள பன்வீர்பூர் கிராமத்தில் நடந்த விவசாயிகளுக்கு எதிரான வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி மவுனமாக இருப்பதாக பிரியங்கா குற்றம் சாட்டினார். பாதிக்கப்பட்டோர் குடும்ப உறுப்பினர்களை சந்திக்க செல்லும் போது பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து நாடு முழுக்க காங்கிரஸ் போராட்டங்களில் குதித்தது.

பாகிஸ்தானை இரண்டாக பிரித்தவர்
இந்த நிலையில்தான், சாம்னா தனது தலையங்கத்தில் இந்த சம்பவத்தை சுட்டிக் காட்டியுள்ளது. பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருப்பதால், அவர் மீது அரசியல் தாக்குதல் நடத்தப்படலாம், ஆனால் அவர் நாட்டிற்காக பெரும் தியாகம் செய்து, பாகிஸ்தானை இரண்டாக (பங்களாதேஷ் உதயம்) பிரித்த சிறந்த தலைவர் இந்திரா காந்தியின் பேத்தி ஆவார். சட்டவிரோதமாக அவரை சிறையில் அடைத்தவர்கள் இந்த உண்மையை உணர்ந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரியங்கா குற்றச்சாட்டு
முன்னதாக கைது செய்யப்பட்ட பிரியங்கா காந்தி அளித்த பேட்டியில், நான் ஒரு மாஜிஸ்திரேட் அல்லது வேறு எந்த நீதித்துறை அதிகாரி முன்னிலையிலும் ஆஜர்படுத்தப்படவில்லை. காலையில் இருந்து வாயிலில் நின்று கொண்டிருந்த எனது சட்ட ஆலோசகரை சந்திக்கவும் எனக்கு அனுமதி தரப்படவில்லை. அதேநேரம், நான் கைது செய்யப்படும்போது என்னுடன் வந்தவர்களுக்கும் எனக்கும் எதிராக பயன்படுத்தப்பட்ட வன்முறை குறித்து இப்போது நான் கூற விரும்பவில்லை, என்று தெரிவித்திருந்தார்.

சாம்னா கட்டுரை
இதுகுறித்து சாம்னாவில் கூறுகையில், தனக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதா என்றுதான் கேட்டார் பிரியங்கா காந்தி. ஆனால் அவர் சரியாக நடத்தப்படவில்லை. வன்முறைக்கு உள்லாக்கப்பட்டுள்ளார். பாஜகவைச் சேர்ந்த பெண் உறுப்பினர்கள் யாருக்காவது இப்படி மட்டும் நடந்திருந்தால் இந்த நேரத்திற்கெல்லாம், பெண் தொண்டர்களின் ராணுவத்தையே பாஜக கட்டவிழ்த்து விட்டிருக்கும். ஆனால், பிரியங்கா காந்தி அப்படி காங்கிரஸை பயன்படுத்த விரும்பவில்லை.

இந்திரா காந்தியிடமிருந்த நெருப்பு
பிரியங்கா காந்தி தீ போன்ற தலைவர் மற்றும் போராளி. அவரது கண்களிலும், குரலிலும், தனது பாட்டி, இந்திரா காந்தியின் அதே நெருப்பு உள்ளது. இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications