"ஹிட்லரை போல.. கேஸ் சேம்பர் தான் பாக்கி!" மத்திய அரசை வெளுத்து வாங்கும் சிவசேனா! காரணம் இதுதான்
மும்பை: மத்திய பாஜக அரசை மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணியில் உள்ள சிவசேனா மிகக் கடுமையாகச் சாடி உள்ளது.
மகாராஷ்டிராவில் இப்போது உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார். அங்கு இப்போது சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் கட்சிகள் அமைத்துள்ள கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது.
மகாராஷ்டிராவில் நீண்ட கால கூட்டணிக் கட்சிகளாக இருந்த சிவசேனாவுக்கும் பாஜகவுக்கும் இடையே இப்போது கடும் மோதல் நிலவுகிறது. சிவசேனா தலைவர்கள் பாஜகவை கடுமையாகத் தாக்கி பேசி வருகின்றனர்.

சிவசேனா
இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியை அமலாக்கத் துறையினர் விமர்சிப்பதைக் கடுமையாகச் சாடி சிவசேனா, தனது அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. மறைந்த காங்கிரஸ் தலைவர்களான நேரு, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோரின் நினைவுகளை மட்டுமின்றி, நேரு-காந்தி பரம்பரையின் சாதனைகளையும் பாஜக அழிக்க முயல்வதாக சிவசேனா சாடி உள்ளது.

காரணம்
ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்புவதன் மூலம், ஒருவர் எவ்வளவு சக்தி வாய்ந்த நபராக இருந்தாலும் அவருக்கு தங்களால் நெருக்கடி கொடுக்க முடியும் என்று பாஜக காட்ட முயல்கிறது என்று சாம்னாவில் விமர்சிக்கப்பட்டுள்ளது. இன்று ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் குறி வைக்கப்படுவது போல நாளைய தினம் யார் வேண்டுமானாலும் குறி வைக்கப்படலாம் என்று விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

கேஸ் சேம்பர்
ஹிட்லர் காலத்தில் எதிரிகளை ஒழிக்கக் கட்டப்பட்ட விஷ வாயு அறைகள் மட்டுமே பாக்கி என்ற ரீதியிலும் சாடியுள்ளது. இப்படியொரு மனநிலையைக் கொண்டு இருந்தால் எப்படி அனைவரையும் சமமாகக் கருத முடியும் என்றும் சாம்னாவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. சிவசேனா, ஆர்ஜேடி, சமாஜ்வாதி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் அமலாக்கத் துறையால் சோதனை நடத்தப்படும் நிலையில், பாஜக தலைவர்கள் மீது அமலாக்கத் துறை எவ்வித ஆக்ஷனும் எடுக்காமல் இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

எஃப்ஐஆர் காப்பி
(முன்னாள் மகாராஷ்டிர அமைச்சர்) அனில் தேஷ்முக், (மாநில அமைச்சர்) நவாப் மாலிக், அபிஷேக் பானர்ஜி, சஞ்சய் ரவுத், அனில் பராப் மற்றும் லாலு பிரசாத் உள்ளிட்டோரை குற்றவாளிகளாகச் சித்தரிப்பது மட்டுமே அமலாக்கத் துறையினர் ஒரே வேலையாக இருந்து வருகிறது. மேலும், நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத் துறையினரால் எஃப்ஐஆர் காப்பியைக் கூட வழங்க முடியாதது ஏன் என்றும் சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.

கேள்வி
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் ராகுல் காந்தியிடம் மூன்று நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. இன்று ஒரு நாள் இடைவெளி விடப்பட்டுள்ள நிலையில், மீண்டும் நாளை விசாரணைக்கு ஆஜராகச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு எதிராக டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யப்படவில்லை என்று காங்கிரஸ் கூறி இருந்துள்ளது. இருப்பினும், ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் சம்மன் அனுப்பியது ஏன் எனக் காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications