இருள் சூழ்ந்த 2020-மத்திய பாஜக அரசின் கொள்கைகள் கூட்டாட்சி கட்டமைப்பை சிதைக்கின்றன: சிவசேனா சீற்றம்
மும்பை: 2020-ம் ஆண்டு இருள் சூழ்ந்ததாக இருந்தது... மத்திய பாஜக அரசின் கொள்கைகள் இந்திய கூட்டாட்சி கட்டமைப்பை சிதைக்கின்றன என சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னா சாடியுள்ளது.
சிவசேனாவின் சாம்னா ஏட்டில் அந்த கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எழுதியுள்ளதாவது:
விவசாயிகள் போராட்டம், புதிய நாடாளுமன்ற கட்டிடம், சீனாவுடனான பதற்றம், மும்பை மெட்ரோ கார் நிறுத்துமிட விவகார, மத்திய பிரதேச ஆட்சி கவிழ்ப்பு போன்றவைகளில் மத்திய அரசு கடைபிடிக்கும் அணுகுமுறையானது நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை சீர்குலைக்கிறது. மத்திய பிரதேசத்தில் கமல்நாத் அரசை கவிழ்த்ததில் பிரதமர் மோடி முக்கிய பங்கு வகித்ததாக பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா கூறுகிறார்.
பலவீனமாக்கப்படும் கூட்டாட்சி
மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜிக்கு எதிராக அனைத்து அஸ்திரங்களையும் பயன்படுத்துகிறது பாஜக. பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள் அனைத்தும் மத்திய அரசை சார்ந்து இருக்கும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டே நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பு பலவீனப்படுத்தப்படுகிறது.
சோவியத் யூனியன் நிலை
காஷ்மீரில் நிலையற்ற அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. மத்திய பிரதேசத்தில் பாஜகவால் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. பீகார் தேர்தலின் போது ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் நெருக்கடியை எதிர்கொண்டார். முந்தைய சோவியத் யூனியனில் என்னமாதிரியான நிலைமை இருந்ததை அந்த சூழ்நிலை உருவாக்கப்படுகிறது.
நாட்டின் எதிர்காலம் நான்கு பேரிடம்..
2020-ம் ஆண்டு மத்தியில் ஆளும் பாஜக அரசின் நம்பகத்தன்மை, மத்திய அரசின் நிர்வாகத்திறமையின்மை ஆகியவற்றை வெளிப்படுத்தி இருக்கிறது. பஞ்சாப் விவசாயிகள் போராடுகிறார்கள். மும்பை மெட்ரோ திட்டம் முடக்கப்பட்டுள்ளது. இந்த தேசத்தின் எதிர்காலம் என்பதே 2 அல்லது 4 நபர்களில் கைகளிதான் கொடுக்கப்பட்டுவிட்டது.
கொரோனா பெருந்துய்ர்
கொரோனா தொற்றால் பல லட்சம் பேர் மரணித்துப் போயுள்ளனர். ஆனால் அதைவிட மோசமானதாக ஜனநாயக கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய நாடாளுமன்றம் தமது ஆன்மாவை தொலைத்துவிட்டது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு ரூ1,000 கோடி செலவிடுவதற்கு பதிலாக சுகாதாரத்துறையை மேம்படுத்தலாம். தற்போதைய சூழ்நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் போன்ற கட்டுமானங்களுக்கு மத்திய அரசு பொதுமக்களிடம் நிதி உதவி கேட்டால் ரூ1 லட்சம் கூட கிடைக்காது. ஏனெனில் இந்த ஆண்டு மக்கள் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர்; ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது; வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் இதுபோன்ற கடினமான சூழ்நிலைகளில் மக்களுக்கு உதவுகின்றன.
2020- இருள் சூழ்ந்தது
2020-ம் ஆண்டு இருள்சூழ்ந்ததாக மன அழுத்தங்களுக்குரியதாக அமைந்துவிட்டது. 2021-ம் ஆண்டு இந்த இருளில் இருந்து நாம் வெளியே வரவேண்டும். பொதுமக்கள் தங்களது குடும்ப நலன்களில் அக்கறை செலுத்த வேண்டும். தேசத்தின் நலனில் பிரதமர் மோடி அக்கறைகாட்ட வேண்டும். இவ்வாறு சாம்னாவில் சஞ்சய் ராவத் எழுதியுள்ளார்.