ஸ்டாலின் "இந்தியா" கூட்டணிக்கு தலைமை தாங்கணும்.. மகாராஷ்டிராவில் இருந்து வந்த குரல்.. தாக்கரே ஆதரவு
மும்பை: இந்தியா கூட்டணிக்குள் பல கட்சிகள் தனித்துச் செயல்பட்டு வருவதாக உத்தவ் தாக்கரே சிவசேனா குற்றஞ்சாட்டியுள்ளது. இதுபோல கூட்டணிக்குள் உள்ள பிரச்சனைகள் பாஜகவுக்குச் சாதகமாக அமைந்துவிடுவதாகக் கூறியுள்ள தாக்கரே சிவசேனா, "இந்தியா" கூட்டணியை ஸ்டாலின் அல்லது மம்தா ஒருங்கிணைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும் சேர்ந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கியுள்ளது. இருப்பினும், இந்த கூட்டணிக்குள் பல சிக்கல்கள் உள்ளன. மேலும், கூட்டணிக்கு யார் தலைவர் என்பதிலும் தெளிவற்ற சூழலே இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் "இந்தியா" கூட்டணியை ஸ்டாலின் தலைமை தாங்க வேண்டும் என மணிசங்கர் அய்யர் கூறியிருந்தார். இதற்கிடையே தாக்கரே சிவசேனாவும் இப்போது அதே கருத்தை வலியுறுத்தியுள்ளது.

ஸ்டாலின் தலைமை தாங்கணும்
இதற்கிடையே 'இந்தியா' கூட்டணிக்குள் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருப்பதாகவும் அதைத் தீர்க்க ஒருமித்த தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் சிவசேனா (தாக்கரே பிரிவு) வலியுறுத்தியுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அல்லது முக்கிய தேசியத் தலைவர் யாரேனும் இந்தக் கூட்டணிக்குத் தலைமை ஏற்க வேண்டும் என்று அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணிக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள தாக்கரே சிவசேனா, 'நட்பு ரீதியான மோதல்கள்' கூட்டணியைப் பலவீனப்படுத்துவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாஜகவை திறம்பட எதிர்கொள்ள, 'இந்தியா' கூட்டணி தனது மோதல்களை விரைந்து முடித்துக் கொண்டு, ஒருமித்த தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என தாக்கரே தரப்பு வலியுறுத்தியது.
ஏகப்பட்ட பிரச்சனைகள்
அதில் மேலும், "மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸுக்கும் காங்கிரஸுக்கும் மோதல் இருக்கிறது. கேரளாவில் இடதுசாரிகளுக்கு எதிராகக் காங்கிரஸ் உள்ளது. மகாராஷ்டிராவிலும் கூட்டணிக்குள் பிரச்சினை எழுந்துள்ளது. இப்படிக் கூட்டணிக்குள் நீடிக்கும் போட்டி மனப்பான்மை, பாஜகவுக்குச் சாதகமாக மாறியுள்ளது" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
ராகுல் காந்தியின் போராட்டக் குணத்தை தாக்கரே தரப்பு பாராட்டியுள்ளது. அதேநேரம் நீண்ட காலமாக அதிகாரத்திற்கு வர முடியாதது, அடிமட்டத் தொண்டர்களிடையே உத்வேகத்தைக் குறைத்துவிட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடி அரசுக்குத் தனிப்பெரும்பான்மை இல்லை என்ற போதிலும், எதிர்க்கட்சிகள் முயற்சிகள் பலன் தருவதில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைக்கும் தலைவர்
தேசிய நெருக்கடியைச் சமாளிக்க, 'இந்தியா' கூட்டணி ஒருமித்த திசையில் அழைத்துச் செல்ல ஒரு தலைவர் தேவை என்று கூறப்பட்டுள்ளது. மம்தா, ஸ்டாலின் அல்லது வேறு ஏதேனும் ஒரு தலைவர் கூட்டணியை வழிநடத்த வேண்டும் என்றும் சீக்கிரமே இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்து தேவை என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மீது காட்டம்
இந்தியா கூட்டணிக்குள் பல பிளவுகள் இருப்பதாக தாக்கரே சிவசேனா சுட்டிக்காட்டியது. லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு ஒற்றுமை உருவானாலும் கூட அது பாஜகவுக்குச் சாதகமாகப் போய்விடுவதாகவும் இதனால் தெளிவான ஒரு பார்வை அவசியம் என்றும் தாக்கரே சிவசேனா வலியுறுத்தியது.. கேரளா, அசாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தேர்தல்களில் ஒற்றுமை அவசியமாக இருக்கும் சூழலில், காங்கிரஸ் தலைவர்களே மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருப்பது எந்த விதத்தில் சரி என சாம்னா கேள்வி எழுப்பியுள்ளது.
அதாவது 'இந்தியா' கூட்டணி என்பது லோக்சபா தேர்தலின்போது மட்டும் இயங்காமல், நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றும் அப்போது தான் பாஜக அரசுக்கு எதிராகத் திறம்படச் செயல்பட முடியும் என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications