இதெல்லாம் எனக்கு புதுசு இல்லை.. அடுத்தக்கட்ட பிளான் என்ன? என்சிபி தலைவர் சரத் பவார் பரபர!
மும்பை: கட்சியில் இதுபோன்று பிரச்சினைகளை சந்திப்பது தனக்கு புதிது அல்ல என தெரிவித்துள்ள சரத் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னம் தங்களுக்குதான் என்று அஜித் பவார் கூறியது பற்றியும் இன்று பிரஸ்மீட்டில் பேசியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநில அரசியலில் திடீர் திருப்பமாக சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் பொறுப்பு சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவிற்கு கொடுத்ததால் அதிருப்தியில் இருந்த அஜித்பவார் தனது தலைமையில் 30 எம்.எல்.ஏக்களுடன் ஆளும் பாஜக - சிவசேனா கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தார். மகாராஷ்டிரா துணை முதல்வராக அஜித் பவார், மூத்த தலைவர்களான சக்கன் புஜ்பால், திலிப் வல்சே பாட்டீல், தனஞ்செய் முண்டே அதிதி தத்காரே உள்ளிட்ட 9 பேரும் அமைச்சர்களாகவும் பதவியேற்றுவிட்டனர்.

இதனால் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியில் மொத்தம் உள்ள 53 எம்.எல்.ஏக்களில் 40 பேர் ஆதரவு தமக்கு இருக்கிறது.. ஆகையால் தேசியவாத காங்கிரஸ் கட்சி எங்களுடையது.. கட்சியின் சின்னமும் எங்களுடையது.. தேசியவாத காங்கிரஸ் கட்சியே நாங்கள்தான் என அஜித்பவார் அறிவித்துள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் படு பிசியாக இருந்த சரத் பவாருக்கு தனது அண்ணன் மகன் அஜித்பவாரின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியை கொடுத்தது.
தேசியவாத காங்கிரசில் பெரும் பிளவை ஏற்படுத்தி பாஜக அரசியல் சதுரங்கம் ஆடியிருப்பது மகாராஷ்டிர அரசியலில் மட்டும் இன்றி நாடு முழுவதும் பரபரப்பு செய்தியாக மாறியுள்ளது. இந்த நிலையில், அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் ஆளும் கூட்டணியோடு கை கோர்த்தது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சரத் பவார் கூறியதாவது:-
இதுபோன்ற விஷயங்கள் எனக்கு புதிது கிடையாது. 1980 ஆம் ஆண்டு நான் வழிநடத்திய கட்சியில் 58 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். பிறகு அனைவரும் பிரிந்து சென்று வெறும் 6 எம்.எல்.ஏக்கள் மட்டுமே இருந்தனர். நான் கட்சியை வலுப்படுத்தினேன். ஆனால், என்னை விட்டு சென்றவர்கள் தோல்வி அடைந்தனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் என்னை தொடர்பு கொண்டு பேசினர். இன்று நடந்தது பற்றி எனக்கு கவலை இல்லை.
நாளை பொதுக்கூட்டம் நடத்த உள்ளேன். இரண்டு நாட்களுக்கு முன்புதான் தேசியவாத காங்கிரஸ் குறித்து மோடி பேசினார். இரண்டு விஷயங்கள் குறித்து பேசினார். தேசியவாத காங்கிரஸ் முடிந்து போன கட்சி என்றார். ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். என்னுடன் இருந்தவர்கள் சிலர் இன்று பதவியேற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம், அனைத்து குற்றச்சாட்டுக்களும் போய்விடும். எனவே அவர்களுகு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications