டெல்லி சலோ.. மகாராஷ்டிராவில் இருந்து வாகனங்களில் டெல்லிக்கு வரும் ஆயிரக்கணக்கான விவசாயிகள்!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 21 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் இன்று நாசிக்கில் இருந்து புறப்பட்டு வாகனங்களுடன் டெல்லி செல்கிறார்கள். அகில இந்திய கிசான் சபா (AIKS) தலைமையின் கீழ் விவசாயிகள் மிகப்பெரிய அளவில் திரண்டு டெல்லியை முற்றுகையிட திட்டமிட்டுள்ளனர்.
அகில இந்திய கிசான் சபா ( AIKS ) ஒருங்கிணைப்பின் கீழ், மகாராஷ்டிராவின் 21 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் இன்ற காலை நாசிக் கோல்ஃப் கிளப் மைதானத்தில் ஒன்றுகூடி டெல்லிக்கு பயணத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளனர்.
டெல்லி செல்லும் இந்த பிரம்மாண்ட வாகன பேரணிக்கு AIKS தேசியத் தலைவர் டாக்டர் அசோக் தவாலே, ஜே பி கவிட், கிசான் குஜார், டாக்டர் அஜித் நவாலே, சுனில் மாலுசரே உள்பட பலர் தலைமை தாங்குவார்கள் என்று அந்த அமைப்பு அறிவித்து இருந்தது.
மன்கிபாத் மோடி உரையின் போது பாத்திரங்களில் ஒலி எழுப்புகள்- புதிய போராட்டங்களை அறிவித்த விவசாயிகள்!
டெல்லி பேரணி
பேரணியை தொடங்கும் பொதுக் கூட்டத்தை கேரள மாநிலங்களவை எம்.பி.,கே.கே.ரகேஷ் வரவேற்கிறார். அப்போது சத்ரபதி சிவாஜி, மகாத்மா ஜோதிபா பூலே மற்றும் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோரின் சிலைகளுக்கு மரியாதை செலுத்துகிறோம். அங்கு ஒரு பெட்ரோல் பம்பில் ஆர்ப்பாட்டம் நடத்திய பின்னர், டெல்லியை நோக்கி பேரணி செல்வோம் என்றும் விவசாயிகள் அமைப்பு அறிக்கையில் கூறியிருந்தது. இதன்படி தங்கள் போராட்டத்தை அவர்கள் இன்று தொடங்கி உள்ளனர்.
சட்டத்திற்கு எதிர்ப்பு
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். மின்சாரத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்சஆதார விலை உத்தரவாதத்திற்கு சட்டப்பாதுகாப்பு வழங்க வேண்டும், குறைந்த பட்ச ஆதார விலையில் உலகளாவிய கொள்முதலை உறுதிசெய்ய வேண்டும்.
போராட்டம் உறுதி
உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும், பொது விநியோக முறையை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்டவை மகாராஷ்டிராவிலிருந்து கிளம்பும் அகில இந்திய கிசான் சபாவின் முக்கிய கோரிக்கைகளாகும். டெல்லி போராட்டத்தில் எங்கள் அமைப்பு இணைவதன் மூலும் வரலாற்று ரீதியான நாடு தழுவிய விவசாயிகளின் போராட்டத்தை மேலும் வலுப்படுத்தும் என்று அந்த அமைப்பு உறுதி தெரிவித்துள்ளது.
விவசாயிகள் போராட்டம்
புதிதாக இயற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் வெவ்வேறு எல்லைகளில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து நவம்பர் 26ம் தேதி முதல் போராடி வருகின்றனர். மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.