"அப்போ அவங்களுக்கு 11 வயதுதான்!" குழந்தைகளின் மரணத்தை நினைவு கூர்ந்து.. சட்டசபையிலேயே கலங்கிய ஷிண்டே
மும்பை: மகாராஷ்டிர சட்டசபையில் பேசிக் கொண்டு இருக்கும்போதே அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கண்ணீர் விட்டு அழுத சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
Recommended Video
மகாராஷ்டிராவில் சிவசேனா-என்சிபி-காங்கிரஸ் மகா விளாஸ் கூட்டணி அரசு கடந்த வாரம் தான் கவிழ்ந்தது. சிவசேனா எம்எல்ஏக்கள் பலரும் இந்தக் கூட்டணிக்கு ஆதரவு அளிக்காததே ஆட்சி கவிழக் காரணமாக இருந்தது.
அதைத் தொடர்ந்து சிவசேனா பாஜக உடன் இணைந்து ஆட்சியை அமைத்தது. சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும் பாஜகவின் பட்னாவிஸ் துணை முதல்வராகவும் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
திமுக அரசை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்.. வள்ளுவர் கோட்டத்தில் அண்ணாமலை உண்ணாவிரதம்
மகாராஷ்டிரா
பட்னாவிஸ் முதல்வராகப் பொறுப்பு ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது. தனக்குப் பின்னால் சிவசேனா நிர்வாகி ஒருவருக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என என்ன நிச்சயம் என உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பி இருந்த நிலையில், அதற்குப் பதில் அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை இருந்தது. இதனிடையே நேற்று ஷிண்டே தரப்பு மகாராஷ்டிர சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தது.
ஷிண்டே கண்ணீர்
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின்னர், மகாராஷ்டிரா சட்டசபையில் ஏக்நாத் ஷிண்டே பேசும் போது கண்ணீர் விட்டு அழுதுவிட்டார். உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக எம்எல்ஏக்களை திரட்டிய சமயத்தில் தனது குடும்பத்திற்கு வந்த அச்சுறுத்தல்களைக் குறிப்பிட்ட ஏக்நாத் ஷிண்டே, 2000ஆம் ஆண்டில் படகு விபத்தில் தனது குழந்தைகள் உயிரிழந்ததையும் குறிப்பிட்டார். அப்போது தான் ஏக்நாத் ஷிண்டே தன்னையும் மீறி அழுதுவிட்டார்.
ஏக்நாத் ஷிண்டே
அப்போது அவர் பேசுகையில், "என் குடும்பத்திற்கு அவர்கள் அச்சுறுத்தல் கொடுத்தார்கள். நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். இப்போது என் அப்பா உயிருடன் இருக்கிறார், என் அம்மா இறந்துவிட்டார். என் பெற்றோருடன் என்னால் அதிக நேரம் செலவிட முடியவில்லை. நான் வேலை முடித்துக் கொண்டு செல்லும்போது அவர்கள் தூங்கிவிடுவார்கள். நான் தூங்கும்போது அவர்கள் வேலைக்குச் சென்று விடுவார்கள்.
குழந்தைகள்
கடந்த 2000ஆம் ஆண்டில் எனது இரு பிள்ளைகள் சொந்த கிராமத்திற்குச் சென்று இருந்தனர். அங்கு நடந்த படகு விபத்து ஒன்றில் எனது இரண்டு குழந்தைகள் உயிரிழந்துவிட்டனர். அப்போது எனது பையனுக்கு வெறும் 11 வயது. பெண்ணுக்கு 7 வயது தான். சிவசேனாவின் ஆனந்த் திகே தான் எனக்கு ஆறுதல் கூறினார். அப்போது நான் உடைந்து போய் இருந்தேன். ஆனந்த் திகே தான் தான் என்னைத் தேற்றினார். சட்டசபையில் என்னை சிவசேனாவின் தலைவராகவும் ஆக்கினார்" என்றார்.
உத்தவ் தாக்கரே
மகா விளாஸ் கூட்டணிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியதைச் சரி என்று விளக்கிப் பேசிய ஷிண்டே, "துரோகம் எனது ரத்தத்தில் இல்லை. தேர்தல் முடிவுகளால் நாங்கள் அவமானப்படுத்தப்பட்டோம். எம்எல்ஏக்கள் தான் முதலில் எனக்குக் கால் செய்தார்கள். அதன் பின்னரே நாங்கள் கிளம்பினோம். அப்போது உத்தவ் தாக்கரே எனக்கு போன் செய்தார், நான் எங்கே போகிறேன், எப்போது திரும்புவேன் என்று அவர் என்னிடம் கேட்டார். உண்மையில் எப்போது என்னிடம் எந்தவொரு திட்டமும் இல்லை. எனவே தாக்கரேவிடம் தெரியாது என்றே பதில் அளித்தேன்
அஜித் பவார்
மகா விகாஸ் கூட்டணி அரசிலேயே என்னை முதலமைச்சராகப் பதவியேற்கப் போவதாகக் கூறினார்கள். ஆனால் என்சிபியின் அஜித் பவார் இதற்கு எதிராக இருந்தார். அதன் பின்னரே உத்தவ் தாக்கரேவை முதல்வராக்க முடிவு எடுத்தோம். உத்தவ் தாக்கரேவை முதல்வர் பதவி ஏற்பார் என அறிவித்த சமயத்தில் அதற்கு நான் முழு ஆதரவு கொடுத்தேன்.
தனிப்பட்ட ஆதாயம்
நான் தனிப்பட்ட ஆதாயத்திற்காக எதுவும் செய்யவில்லை. எங்கள் கட்சியைச் சேர்ந்த பல எம்எல்ஏக்கள் கூட்டணியால் கவலை அடைந்து இருந்தனர். பாஜக உடனான கூட்டணியே இயற்கையான ஒன்று என அவர்கள் கருதினர். உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்ததால் 2.5 ஆண்டுகளில் எங்கள் கட்சி பலன் பெற்று இருக்க வேண்டும். ஆனால், உண்மையில் அப்படி எதுவும் நடக்கவில்லை.
சாதாரண மனிதர்கள்
நாங்கள் ஒன்றும் பெரும் பணக்காரர்களின் வாரிசு இல்லை. நமது நாட்டில் சாதாரண மனிதனும் முதல்வர் ஆகலாம் என்பதற்கு உதாரணம் நான். நாங்கள் டீ விற்கும், ரிக்ஷா இழுக்கும், காய்கறி விற்பனையாளர்கள் மற்றும் விவசாயிகள் தான். இது அனைவருக்குமான அரசு. வேலை செய்வது தவறா? பிரதமர் நரேந்திர மோடியை சாய்வாலா என்று அழைத்தனர். அப்படி அழைத்த கட்சியே இப்போது காணாமல் போய்விட்டது" என்று காங்கிரஸை மறைமுகமாகத் தாக்கி பேசினார்.