உதய்ப்பூர் கொலை: வலைதளத்தில் கருத்து கூறிய சிறுமிக்கு கொலை-பலாத்கார மிரட்டல்.. காஷ்மீர் நபர் கைது
மும்பை: நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்ததாக ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் கண்ணையாலால் கொலை செய்யப்பட்ட நிலையில் அதுதொடர்பாக வீடியோ வெளியிட்ட மும்பையின் 15 வயது சிறுமிக்கு கொலை மற்றும் பலாத்கார மிரட்டல் விடுத்த காஷ்மீர் நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாஜகவின் செய்தி தொடர்பாளாராக இருந்த நுபுர் சர்மா மே மாத இறுதியில் தொலைக்காட்சி விவாதத்தில் இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து அவர் பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து நுபுர் சர்மா தொடர்பாக பிரச்சனைகள் எழுந்து வருகின்றன.
நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை.. நுபுர் சர்மாவுக்கு எதிராக.. தென்கொரியாவில் இஸ்லாமியர்கள் போராட்டம்
கண்ணையாலால் கொலை
இந்நிலையில் தான் கடந்த மாத இறுதியில் (ஜூன்) 28 ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் டெய்லர் கண்ணையாலால் என்பவர் கொலை செய்யப்பட்டார். அவரது கடைக்குள் நுழைந்த 2 பேர் அவரது தலையை துண்டித்து கொலை செய்தனர். நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டதால் கொலை செய்ததாக அவர்கள் கூறிய நிலையில் பிரதமர் மோடிக்கும் மிரட்டல் விடுத்தனர். இது பெரும் சர்ச்சையானது. இதையடுத்து கொலையாளிகள் மற்றும் உடந்தையாக இருந்தவர்களை கைது செய்து என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது.
மும்பை சிறுமிக்கு மிரட்டல்
இந்நிலையில் தான் மும்பையை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கண்ணையாலால் கொலை தொடர்பாக தனது கருத்தை வீடியோவாக பதிவிட்டு இருந்தார். இதன் தொடர்ச்சியாக அந்த பெண்ணுக்கு போன் செய்த மர்மநபர் ஒருவர் கொலை மற்றும் பலாத்காரம் செய்வதாக மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் வாட்ஸ்அப்பிலும் மெசெஜ் செய்து மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறினார். அவர்கள் மும்பை விபி ரோடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு விசாரணையை துவங்கினர்.
காஷ்மீர் வாலிபர் கைது
மேலும் சிறுமிக்கு மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் விசாரணை நடத்திய நிலையில் ஜம்மு காஷ்மீர் பட்காம் பகுதியை சேர்ந்த பயாஸ் அகமது பட் (வயது 30) என்பவரை கைது செய்தனர். இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமராவதியில் கொலை
முன்னதாக மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் உமேஷ் பிரஹலாத்ராவ் கடந்த ஜூன் 21 இரவில் மெடிக்கல் கடையில் இருந்து டூவீலரில் வீட்டுக்கு சென்றார். அப்போது மர்மநபர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக முதாசீர் அகமது (22), ஷாரூக் பதான் (25), அப்துல் தவ்பிக் (24), சோயிப் கான் (22), அதிப் ரசீத் (22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஷமீம் அகமது பெரோஸ் அகமது தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். விசாரணையில் நுபுர் சர்மாவை ஆதரித்து உமேஷ் பிரஹலாத்ராவ் வாட்ஸ்அப் குழுவில் கருத்து பகிர்ந்ததால் அவரை தீர்த்து கட்டியது தெரியவந்தது.