ரூ 30,000 ஓய்வூதியம்.. குடும்பம் நடத்தவே கஷ்டமா இருக்கு.. நாதழுதழுத்த வினோத் காம்ப்ளிக்கு புதிய பணி
மும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளிக்கு மாதம் ரூ 1 லட்சம் ஊதியத்தில் மகாராஷ்டிரா தொழிலதிபர் ஒருவர் பணி வழங்கியுள்ளார்.
1990 களில் கிரிக்கெட் விளையாட்டில் அறிமுகமானவர் வினோத் காம்ப்ளி. சச்சின் டெண்டுல்கரும் வினோத்தும் இணைந்து விளையாடுவதற்கு ரசிகர்கள் அதிகம். மேலும் காம்ப்ளியும் சச்சினும் சிறு வயது முதலே நண்பர்கள்.
இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என கடுமையாக போராடுவார். அதே சமயம் இந்திய அணி தோல்வி அடைந்தால் அந்த தோல்வியை தாங்க மனமில்லாமல் சிறு பிள்ளை போல் அழுத காட்சிகளையும் நாம் பார்த்துள்ளோம்.

கிரிக்கெட்
இதனால் இவர் கிரிக்கெட்டில் மிகப் பெரிய ஸ்டாராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு சில பிரச்சினைகளால் அவரது கிரிக்கெட் விளையாட்டு முடிவுக்கு வந்தது. 2000 ஆவது ஆண்டுக்கு பிறகு இந்திய அணியில் காம்ப்ளி விளையாடவில்லை. அவருக்கு பிசிசிஐ ரூ 30 ஆயிரத்தை ஓய்வூதியமாக வழங்கி வருகிறது.

ஊடகம்
இந்த நிலையில் அண்மையில் மிட்டே எனும் ஊடகத்திற்கு காம்ப்ளி பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் பிசிசிஐ கொடுக்கும் பென்ஷன் தொகையை மட்டும் வைத்தே குடும்பம் நடத்தி வருகிறேன். அதற்காக நான் பிசிசிஐக்கு கடமைப்பட்டிருக்கிறேன். சச்சினுக்கு என் நிலைமை தெரியும். ஆனால் நான் அவரிடமிரு்து எந்த உதவியையும் எதிர்பார்க்கவில்லை. மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் என்னை பயிற்சியாளர் பொறுப்பில் பயன்படுத்திக் கொள்ளலாம் என காம்ப்ளி வாய்ப்பு கேட்டார்.

வாய்ப்பு
எனினும் அவருக்கு வாய்ப்பளிக்க கிரிக்கெட் சங்கம் முன் வரவில்லை. இந்த நிலையில் மகாராஷ்டிரா தொழிலதிபர் ஒருவர் வினோத் காம்ப்ளிக்கு உதவ முன் வந்துள்ளார். மகாராஷ்டிரா தொழிலதிபர் சந்தீப் தோரட் வினோத் காம்ப்ளிக்கு மாதம் ரூ 1 லட்சம் ஊதியத்தில் வேலை தருவதாக உறுதியளித்துள்ளார்.

என்ன வேலை
இதுகுறித்து மராத்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மும்பையில் உள்ள சாயாத்ரி இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில்தான் காம்ப்ளிக்கு வேலை கிடைத்துள்ளது. இது கிரிக்கெட் தொடர்பான பணி அல்ல. அந்த நிறுவனத்தின் நிதிப் பிரிவில் ஒரு உயர்பதவி வேலை. மும்பை தொழிலதிபர் அளித்த வாய்ப்பு காம்ப்ளியின் பொருளாதார பிரச்சினையை தீர்க்கும். ஆனால் அவரது கிரிக்கெட் மீதான தாக்கத்தை தீர்க்காது. எனவே இந்த பணியை காம்ப்ளி ஏற்றுக் கொள்கிறாரா இல்லை கிரிக்கெட் லைனிலேயே செல்ல விரும்புகிறாரா என்பதை அவர்தான் சொல்ல வேண்டும் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications