வந்துட்டேன்னு சொல்லு.. வோடபோன் கம்பெனியில் இப்போ மத்திய அரசின் பங்கு 48.99%! அதிர்ந்த பங்குச் சந்தை
மும்பை: மத்திய அரசு நிலுவையில் உள்ள ஸ்பெக்ட்ரம் கட்டணத்தை ஈக்விட்டி பங்குகளாக மாற்ற ஒப்புதல் அளித்ததை அடுத்து, செவ்வாய்க்கிழமை காலை வர்த்தகத்தில் வோடஃபோன் ஐடியா லிமிடெட் (VI) பங்குகள், 10 சதவீதம் வரை உயர்ந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
ஒரு பங்கின் விலை ரூ. 10 என்ற அடிப்படையில் 3,695 கோடி ஈக்விட்டி பங்குகளை வெளியிட திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ரூ. 36,950 கோடி மதிப்புள்ள நிலுவைத் தொகைகள் பங்கு முதலீடாக மாற்றப்படும். இருப்பினும், வோடஃபோன் ஐடியா பங்குகளின் கடைசி முடிவு விலை ரூ. 6.8 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த மாற்றத்திற்குப் பிறகு, வோடஃபோன் ஐடியாவில் இந்திய அரசின் பங்கு 22.6% லிருந்து 48.99% ஆக உயரும். இருப்பினும், நிறுவனத்தின் செயல்பாட்டு கட்டுப்பாட்டை தாங்கள்தான், தொடர்ந்து கவனிப்போம் என்று வோடஃபோன் ஐடியா தெளிவுபடுத்தியுள்ளது.
2013 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின்படி, கடந்த 90 வர்த்தக நாட்களின் அல்லது பிப்ரவரி 26, 2025 வரை முந்தைய 10 நாட்களின் அடிப்படையில் வெளியீட்டு விலை நிர்ணயிக்கப்பட்டது. தொலைத்தொடர்பு அமைச்சகம், செப்டம்பர் 2021 தொலைத்தொடர்பு சீர்திருத்த தொகுப்புக்கு ஏற்ப, மார்ச் 29 அன்று இந்த மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்தது. வோடஃபோன் ஐடியா நிறுவனம், அதிகாரப்பூர்வமாக மார்ச் 30 அன்று இந்த உத்தரவைப் பெற்றது.
இரண்டாவது முறையாக அரசு வோடஃபோன் ஐடியாவின் கடனை பங்குகளாக மாற்றுகிறது. முன்னதாக, 2023 இல், ரூ. 16,133 கோடி கடன் அதே ரூ. 10 பங்கு விலையில் மாற்றப்பட்டது.
இந்த மாற்றம் வோடஃபோன் ஐடியாவின் உடனடி நிதி அழுத்தத்தை குறைத்தாலும், 4G மற்றும் 5G நெட்வொர்க்குகளை விரிவுபடுத்துவதற்கு புதிய நிதியை திரட்டுவதில் நிறுவனம் இன்னும் சவால்களை எதிர்கொள்கிறது என்று சிட்டி ரிசர்ச் என்ற தரகு நிறுவனம் எச்சரித்துள்ளது.
கடந்த ஆண்டில் வோடஃபோன் ஐடியா பங்குகளின் மதிப்பு 50% க்கும் அதிகமாக குறைந்துள்ளது. இது நிறுவனத்தின் நிச்சயமற்ற எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications