மும்பை தனியார் மருத்துவமனைகளில் குவிந்துள்ள தடுப்பூசி.. மாநகராட்சியிடமிருப்பதை விட 4 மடங்கு அதிகம்
மும்பை: மும்பையில் மாநகராட்சி நடத்தும் தடுப்பூசி மையங்களில் ஸ்டாக் இல்லாத நிலையில், தனியார் மருத்துவமனைகளில் நிறைய கையிருப்பு இருந்தன. இந்த ஏற்றத்தாழ்வுக்கு என்ன காரணம் என்பது பற்றி கேள்விகள் எழுந்துள்ளன.
முந்தைய தடுப்பூசி கொள்கையின் கீழ், மாநிலங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள், தடுப்பூசி உற்பத்தியில் 25 சதவீதத்தை நேரடியாக உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்க அனுமதிக்கப்பட்டனர் அல்லவா, அப்போது, மகாராஷ்டிரா மே மாதத்தில் 25.10 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்களை வாங்கியது.
தனியார் மருத்துவமனைகள், மறுபுறம், 32.38 லட்சம் டோஸ்களை வாங்கியுள்ளன, இது எந்த ஒரு மாநிலத்தை விடவும் அதிகமானது. மகாராஷ்டிரா மாநில தலைநகர், மும்பையில் தனியார் மருத்துவமனைகள் 22.37 லட்சம் டோஸ்களை வாங்கியுள்ளன. இது மும்பை மாநகராட்சியிடம் கையிருப்பு உள்ள, 5.23 லட்சம் டோஸ் அளவை விட நான்கு மடங்கு அதிகம்.
ஏப்ரல் மாதத்தில், தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசி உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக வாங்க முடியவில்லை என்பதால், அப்போது மும்பை மாநகராட்சி 9.47 லட்சம் டோஸ்களை மாநிலத்திடமிருந்து பெற்றிருந்தது.
இந்த நிலையில், ஜூன் 8 முதல், தடுப்பூசி கொள்கை மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. மாநிலங்களின் அழுத்தம் மற்றும் உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகளைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, டிவியில் உரையாற்றியபோது, மாநிலங்கள் நேரடியாக வாங்க அனுமதிக்கப்பட்ட 25 சதவீத தடுப்பூசி அளவை இனி மத்திய அரசே கொள்முதல் செய்யும் என்று தெரிவித்தார்.
டெல்டா வகை வைரஸ்.. கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசி பெற்றவர்களையும் தாக்கலாம்.. ஷாக் ரிப்போர்ட்!
மே 1 முதல் ஜூன் 2 வரை மும்பையில் தனியார் மருத்துவமனைகள் 3.34 லட்சம் டோஸ்களை மட்டுமே செலுத்தியுள்ளன. இதன் பொருள், அவர்கள் மொத்த பங்குகளில் சுமார் 15 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்தினர். இது தேசிய அளவில் உள்ள சராசரியான 17 சதவீத டோசை விடக் குறைவு.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் சமீபத்தில் நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மே மாதத்தில் 1.29 கோடி டோஸ்களை வாங்கியதாக தெரிவித்திருந்தது. ஆனால், அவை 22 லட்சம் டோஸ்களை மட்டுமே செலுத்தியது. அவை வாங்கியதில் இது 17 சதவீதம் ஆகும். மற்றவை மருத்துவமனையில் ஸ்டாக்கில் உள்ளன.
மும்பையில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளாலும் வாங்கப்பட்ட டோஸ்களில் கிட்டத்தட்ட 44 சதவீதம் அதாவது, 9.89 லட்சம் டோஸ்கள், சர் எச்.என் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனையால் வாங்கப்பட்டுள்ளது.
சர் எச்.என் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், எங்கள் மருத்துவமனை ஒரு நாளைக்கு 10,000-15,000 டோஸ்களை வழங்கியது. மே மாதத்தில் சுமார் 4.65 லட்சம் டோஸ்கள் போட்டுள்ளோம், என்றார்.