இன்னொரு ஷிண்டே அஜித் பவார்- பாஜகவிடம் இருந்து என்சிபியை காப்பாற்ற தியாகம் செய்த சரத் பவார்?
மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனாவைப் போல தேசியவாத காங்கிரஸ் கட்சியை பாஜக உடைத்து சின்னாபின்னமாக்கும் முயற்சியைத் தடுக்கவே தமது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக சரத் பவார் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவில் 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிந்த நாளில் இருந்து சரத்பவாரின் உறவினரும் என்சிபி கட்சியின் மூத்த தலைவருமான அஜித் பவார், சர்ச்சைக்குரிய அரசியல் முகமாக இருந்து வருகிறார். 2019-ம் ஆண்டு தேர்தலில் பாஜக 105 இடங்கள், சிவசேனா 56, என்சிபி 54, காங்கிரஸ் 44 இடங்களில் வென்றன. பாஜகவும் சிவசேனாவும் இணைந்து ஆட்சி அமைக்கவில்லை. பாஜகவுடன் சிவசேனா உறவை முறித்துக் கொண்டது.

சிவசேனா- காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் என்கிற புதிய கூட்டணி உருவானது. அப்போது திடீரென என்சிபி- பாஜக இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதாக அஜித் பவார் தன்னிச்சையாக அறிவித்தார். அத்துடன் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக, அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். இருந்த போதும் என்சிபி கட்சி அப்போது அஜித் பவார் பக்கம் போகவில்லை. முற்று முழுதாக சரத்பவார் தலைமையில்தான் இருந்தது. இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என தெரிந்த தேவேந்திர பட்னாவிஸ், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அஜித் பவாரும் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு என்சிபி எனும் தாய்வீட்டுக்கே திரும்பினார்.
பின்னர் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் அரசு பதவியேற்றது. இந்த அரசிலும் அஜித் பவார் துணை முதல்வராகத்தான் இருந்தார். ஆனாலும் அஜித் பவார் மீது பல்வேறு வழக்குகள், ரெய்டுகள் என இடைவிடாமல் பாய்ந்து கொண்டே இருந்தன. இதனால் அஜித் பவார், பாஜக பக்கம் இயல்பாகவே தள்ளிவிடப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போதுதான் சிவசேனாவை பாஜக இரண்டாக உடைத்து கூட்டணி ஆட்சியையே கவிழ்த்தது. சிசேனாவின் ஷிண்டே- பாஜக கூட்டணி ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது.

சிவசேனாவை நாசமாக்கி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அக்கட்சியின் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள், எம்பிக்களை திரட்டுவதற்கு பின்னணியில் பாஜக இருந்தது. இதேபோல அஜித் பவார் தலைமையில் என்சிபி எம்.எல்.ஏ, எம்பிக்களை அஜித்பவார் பக்கம் திரட்டுகிறது பாஜக என்பது குற்றச்சாட்டு. அஜித் பவாரும், ஷிண்டே பாணியில் ஒட்டுமொத்த எம்.எல்.ஏக்களுடன் பாஜக பக்கம் போகப் போகிறார்; ஷிண்டேவை கழற்றிவிட்டு அஜித் பவாருடன் கை கோர்க்கப் போகிறது பாஜக என்பதெல்லாம் கடந்த சில வாரங்களாக உலா வந்த செய்திகள். இதனை சரத்பவார் பகிரங்கமாக மறுத்தாலும் பல நேரங்களில் இத்தகைய பிளவுவேலை, நாசகார சதித் திட்டங்களை கோட்டிட்டுக் காட்டியும் வந்தார்.
இப்போது திடீரென, என்சிபி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத் பவார் அறிவித்துள்ளார். அவரது இந்த முடிவால் கட்சியின் மூத்த தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அதிர்ந்து போயுள்ளனர். சரத்பவாரின் இந்த அறிவிப்பை ஏற்க முடியாதவர்களாக கதறி அழுது கொண்டிருக்கின்றனர். ஆனால், அஜித் பவார் தலைமையில் என்சிபி பாஜகவிடம் விலை போவதைத் தடுக்க சரத் பவார் கையில் எடுத்த கடைசி அஸ்திரம்தான் இந்த ராஜினாமா அறிவிப்பு என்கின்றனர் மூத்த அரசியல் தலைவர்கள்.
பாஜக எனும் சுவர் இன்னும் எத்தனை அரசியல் கட்சிகளை காவு வாங்க போகிறதோ?












Click it and Unblock the Notifications