கோலாகலம்.. மைசூர் சாமுண்டீஸ்வரியை பூஜை செய்து.. தசரா விழாவை தொடங்கி வைத்த ஜனாதிபதி திரௌபதி முர்மு
மைசூரு: சரித்திர புகழ் பெற்ற 412-வது மைசூரு தசரா விழாவை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து தொடங்கி வைத்தார். இன்று தொடங்கி 10 நாட்கள் வரை நடைபெறும் இத்திருவிழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். விஜயதசமி அன்று நடைபெறும் யானைகள் ஊர்வலத்தில் 750 கிலோ தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன் சிலை வைக்கப்பட்டு மைசூரு அரண்மனையில் பிரமாண்ட ஊர்வலம் நடைபெறும்.
அம்பிகையின் அருளை பெறுவதற்கு பல விரதங்கள் இருந்தாலும் அவற்றுள் மிக முக்கியமானது நவராத்திரி விரதமே மிகச் சிறப்பானது. நவராத்திரியின் சிறப்பு புரட்டாசி மாதம் அமாவாசையை அடுத்து பிரதமை துவங்கி ஒன்பது நாட்கள் பூஜை அனுஷ்டிக்கப்படுகிறது.
கர்நாடக மாநிலம், மைசூருவில் தசரா விழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு தசரா விழா இன்று தொடங்கி வரும் 5ம் தேதி வரை 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை தொடங்கி வைக்க குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவுக்கு கர்நாடக அரசு அழைப்பு விடுத்திருந்தது.
இந்நிலையில், குடியரசுத்தலைவரின் நிகழ்ச்சிகள் குறித்த அறிக்கையை ராஷ்டிரபதி பவன் நேற்று வெளியிட்டது.
தசராவதி ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்பிகை பீட கும்பாபிஷேகம் - ஸ்ரீ மஹா பைரவர் ருத்ர ஆலயத்தில் கோலாகலம்
திரௌபதி முர்மு
அதன்படி, இன்று காலை சிறப்பு விமானம் மூலம் மைசூரு வந்த அவர், சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, பின் அங்கு அலங்கரிக்கப்பட்ட வெள்ளி அம்பாரியில் அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு மலர்களை தூவி, தசரா திருவிழாவை தொடங்கி வைத்தார். அவருடன் ஆளுநர் தவார் சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர்கள் பிரகலாத் சோஷி, சோபா கரண் ராஜி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.
ஜொலிக்கும் அரண்மனை
412வது மைசூரு தசரா திருவிழாவை முன்னிட்டு மைசூரு அரண்மனை இரவு நேரங்களில் ஜொலிப்பதற்காக விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தசரா பண்டிகை கொண்டாடும் இந்த நாட்களில் மைசூரூ மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. அரண்மனையில் புகழ்பெற்ற அரச தர்பார் வைபோகம் நடைபெறும் அதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு அரச வம்சத்தினரின் தர்பார் கோலத்தினை காண்பார்கள்.
மைசூரு காவல்தெய்வம் சாமுண்டீஸ்வரி
மைசூரு நகரிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் சாமுண்டி மலையில் சாமுண்டீஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது. ஆதிகாலத்தில் இந்தப் பகுதி மகிஷாசூரன் என்ற அசுர வம்ச மன்னனால் ஆளப்பட்டதாகவும், அவனது பெயரிலேயே மகிஷா ஊரு என்ற பெயரில் அழைக்கப்பட்டதாகவும், அதுவே மருவி மைசூரூ என்றானதாகவும் சொல்லப்படுகிறது. பெண் தெய்வமான சாமுண்டீஸ்வரி, மகிஷாசூரனை வதம் செய்து இந்த நகரத்தின் காவல் தெய்வமாக மாறியதாக புராண கதைகள் சொல்கின்றன. மன்னர் ஆட்சிகாலம் தொடங்கி மக்களாட்சி காலம் வரை தமிழகம், கர்நாடகாவை ஆட்சி செய்வோர் சாமுண்டீஸ்வரியின் அருளாசியை பெறாமல் ஆட்சி நடத்துவதில்லை. மகிஷனை சம்ஹரித்த காலம் அறிய முடியாத காலம் தொடங்கி இன்று வரை பல மாற்றங்களை மைசூரு கண்டு வந்தாலும் அங்கு மாறவே மாறாத ஒரே சக்தியாக தேவி சாமுண்டீஸ்வரி விளங்குகிறாள்.
மைசூரு மன்னர்களின் குல தெய்வம்
12ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹோய்சாள மன்னர் விஷ்ணுவர்த்தன் அன்னைக்கு திருப்பணி செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர். 1573ம் ஆண்டு நான்காம் சாமராஜ உடையார் மைசூரூ நகரை ஆண்டு வந்தார். இவரின் குல தெய்வமான சாமுண்டீஸ்வரியின் ஆலயத்தை தரிசித்து விட்டு திரும்பும்போது மழையும் இடியும் சூழ்ந்து கொண்டது. அப்போது மன்னரையும் அவரது ஆட்களையும் காப்பாற்றிய அன்னை சாமுண்டீஸ்வரிக்கு நன்றி தெரிவிக்க மைசூரின் எந்த பக்கம் இருந்து பார்த்தாலும் தெரியும் விதமாக சாமுண்டீஸ்வரி ஆலயத்தை விரிவாக எழுப்பினார். 3486 அடி உயரத்தில் கொலு வீற்றிருக்கும் இந்த சாமுண்டீஸ்வரி கோயிலை 1872ஆம் ஆண்டு கிருஷ்ணராஜா உடையார் புனரமைத்து விரிவாக்கினார்.
மகிஷாசூரன்
சிவனை நோக்கி தவமிருந்தான் மகிஷாசூரன். தவத்தை மெச்சிய சிவன் வரம் கொடுத்தார். தனக்கு பெண்ணால் மட்டுமே மரணம் வரவேண்டும் என்று வரம் கேட்க அப்படியே வரம் கொடுத்தார் சிவன். என்ன ஓரு ஆணவம், பெண்ணின் சக்தியை தவறாக எடை போட்டான் மகிஷாசூரன். சிவனிடம் வரம் பெற்ற மகிஷாசுரன் பெண்ணைத் தவிர தனக்கு மரணமில்லை என்பதால் அவனது அட்டகாசம் தாங்கமுடியவில்லை. மகிஷனை அழிக்க தேவர்கள் முயற்சி செய்தனர். சிவனிடம் முறையிட்டனர். உடனே பெண்ணால் அந்த அசுரனை அழிக்க முடியும் என்று கூறினார். தேவர்கள் அன்னை பார்வதியை வேண்டினர். ஆடிமாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் அன்னை சாமுண்டியாக மஹிசூரில் அவதரித்தார்.
சாமுண்டீஸ்வரியின் ஆயுதங்கள்
சாமுண்டீஸ்வரிதேவி முப்பெரும் தேவர்களின் ஆசியுடன் 18 கைகளுடன் பிரமாண்டமாக காட்சியளித்தாள். ஒவ்வொரு கையிலும் கத்தி, சக்கரம், திரிசூலம் உள்பட பல ஆயுதங்கள் தாங்கி நின்றாள். மக்களை வாட்டிவதைத்து வந்த மகிஷாசுரனுடம் போர் தொடுத்து அவனை வதம் செய்தார். அசுரனை அழித்த சாமுண்டீஸ்வரியை மக்கள் போற்றி வணங்கியதுடன், தங்களுக்கு துணையாக இதே இடத்தில் தங்கி அருள்பாலித்து ஆதரிக்க வேண்டும் என்று வேண்டி கொண்டனர். பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று சாமுண்டிமலையில் குடிகொண்டாள்.
தங்க அம்பாரியில் பவனி வரும் சாமுண்டீஸ்வரி
பிரம்மாண்ட ராஜகோபுரம் வரவேற்க கருவறையில் எட்டுக் கரங்களுடன் சாமுண்டீஸ்வரி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். பழமையான இச்சிலை மார்க்கண்டேய மகரிஷியால் ஸ்தாபிக்கப்பட்டது. இங்கு நரபலி, மிருகபலி அளிக்கப்பட்டது. 18ம் நூற்றாண்டில் இப்பழக்கம் நிறுத்தப்பட்டது. தசரா பண்டிகை கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமே மைசூரு அன்னை சாமுண்டீஸ்வரிதான். மகிஷனை அழித்து வெற்றி பெற்ற அன்னையை கொண்டாடும் விதமாகவே பத்து நாட்கள் தசரா திருவிழாவாக மைசூரில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விஜயதசமி தினத்தன்று அலங்கரிக்கப்பட்ட தலைமை யானையின் மீதேறி சாமுண்டீஸ்வரி அம்மன் தங்க அம்பாரியில் அமர்ந்து பவனி வருவதைக் காண கண்கோடி வேண்டும்.