இவன் என்ன கூப்டுறது.. நம்ம என்ன போறதுனு கெளரவம் பார்க்காதீங்க! அனைத்து கட்சிகளை அழைக்கும் ஸ்டாலின்!
நாகை: தொகுதி சீரமைப்பால் தமிழகத்திற்கு மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என கூறி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 5ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதில் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு கவுரவம் பார்க்காமல் அனைவரும் வரவேண்டும் என மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
2026-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படுவதாகக் கூறப்படும் நிலையில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் 31 தொகுதிகளாக குறையலாம் என கூறப்படுகிறது.

இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் கூட்டத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
மொத்தம் 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் திமுகவின் எதிரியாகவும் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாகவும் இருக்கும் அதிமுக இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். திமுக கூட்டணி கட்சிகள் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் பாஜக இந்த கூட்டத்தில் பங்கேற்காது என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அனைவரும் வரவேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நாகையில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். முன்னதாக நாகப்பட்டினம் மாவட்ட திமுக செயலாளர் கௌதமன் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார்
அப்போது பேசிய அவர்," தமிழக எம்.பி.க்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் தொகுதி மறுசீரமைப்பு என்று பாஜக சதி செய்கிறது. வரும் 5-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு பெரும்பாலான கட்சிகள் வருவதாக கூறியுள்ளனர். ஆனால் சிலர், இவன் என்ன அழைப்பது, நாம் என்ன போவது என்று இதில் கௌரவம் பார்க்காதீர்கள். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு வரமுடியாது என்று சொன்னவர்கள் தயவுகூர்ந்து வரவேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்.
தமிழ்நாட்டு நலனை கருத்தில் கொண்டு அனைத்துக்கட்சி கூட்டத்தில் 40 கட்சி தலைவர்களும் பங்கேற்க வேண்டும். தமிழ்நாட்டு உரிமைக்காக நடக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தை அரசியலாக பார்க்கவேண்டாம். இது நம்முடைய உரிமை மும்மொழிக் கொள்கையையும், தொகுதி மறுசீரமைப்பையும் கட்டாயப்படுத்தி கொண்டுவந்து தமிழ்நாட்டின் உரிமை மற்றும் பிரதிநிதித்துவத்தை சிதைக்க திட்டமிடுகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.
அதனை எதிர்க்கவே அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம். தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்திருக்கிற அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு வரமுடியாது, வர இயலாது என்பவர்களுக்கு நான் சொல்ல வேண்டியது, "இது தனிப்பட்ட கட்சி சார்ந்த சிக்கல் அல்ல. இதனை அரசியலாக பார்க்காமல், தமிழ்நாட்டின் உரிமைக்காக என்பதை உணர்ந்து முடிவெடுங்கள்" என்பதே.
நாடாளுமன்றத்தில் இப்போது தமிழ்நாடு பெற்றிருக்கிற 39 மக்களவை உறுப்பினர்களை வைத்துக்கொண்டே, ஒவ்வொன்றையும் போராடிதான் பெற வேண்டியதாக உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை மறுசீரமைப்பு என்கிற பெயரில் மேலும் குறைப்பது என்பது முற்றிலும் தமிழ்நாட்டு உரிமைக்கு எதிரானது. ஆகவே, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தால்தான் நாம் உரிமையை மீட்க முடியும் என்ற ஒருமித்த நோக்கத்துடன் அனைவரும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications