நாகை மலர் மருத்துவமனை மருத்துவருக்கு கொரோனா.. சிகிச்சை பெற்றவர்களுக்கு முக்கிய வேண்டுகோள்
நாகை: நாகையில் மலர் மருத்துவமனையின் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரிடம் சிகிச்சை பெற்றவர்கள் தாமாக முன்வந்து ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட நிர்வாகம் தொலைப்பேசி எண்கள் வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவும் வேகம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சராசரியாக 50க்கும் மேல் உள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 58 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று மாலை நிலவரப்படி 969ஆக உயர்ந்துள்ளது தமிழகத்தில் 44 பேர் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நாகப்பட்டினத்தில் மலர் மருத்துவமனையின் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரிடம் சிகிச்சை பெற்றவர்கள் தாமாக முன்வந்து ஒத்துழைப்பு தருமாறு நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறிப்பிட்ட மருத்துவரிடம் சிகிச்சை பெற்றவர்கள் 9751425002, 9500493022 என்ற எண்களில் தகவல் தரலாம் என்று மாவட்ட ஆட்சியர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இதுவரை 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications